எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Saturday, October 14, 2023

’ அதிர்வு’ விடுதலைப்புலிகளின் அதிகாரமையம்?

உலகிலேயே அதிகமுறை ஏமாந்ததில் சாதனைபடைத்த இனம் என்றால் அது தமிழினத்தைவிட வேறொன்று இருக்கமுடியாது.
அரைநூற்றாண்டுகாலமாக, சிங்களத்தின் காகிதஒப்பந்தங்களையும், ஆட்சியாளர்களின் வாய்வாக்குறுதிகளையும் நம்பி நம்பியே , இந்த நிலைமைக்கு வந்துவிட்டான் தமிழன்.
‘ மரம் பழுத்தால் வௌவால் வரும் ‘ என்று 1970 களில் , தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் எவனோ ஒருவன் தான்தோன்றிதனமாக முழங்கினான்.
பதவிகளையே குறியாகக்கொண்டிருந்தமையால் கூட்டணியும் இதைக்கண்டுகொள்ளாமலேவிட்டது.

மரம் நட்டாற்றானே பழம் வர ? பழம் பழுத்தாற்றானே வௌவால் வர ?

மரம் நடப்பட்டிருக்கிறதா? நடுவதற்கான முயற்சிகளாவது மேற்கொள்ளப்படுகிறதா?
இதையெல்லாம், தமிழன் எண்ணிப்பார்க்கவேயில்லை.

’ வீட்டுக்கு நேரே புள்ளடிபோடு’ அல்லது ‘ சூரியனுக்கு நேரே புள்ளடிபோடு’ என்றளவில் தனது கடமை முடிந்தது என்று இருந்துவிட்டான்.

தேர்தல் பரப்புரையில் மக்களுக்குக்கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில்பறக்கவிடப்பட்டு, தமிழர் கூட்டணியானது சிங்களத்துக்குக் காவடி எடுக்கமுனைந்தபோது, ஆங்காங்கே மாணவர்கள் ,குழுக்கள்குழுக்களாக நின்று , தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

ஆனாலும், அத்தனையும் , ஆட்சியாளர்களால் , ஆயுதமுனையில் அடக்கப்பட்டது நாமனைவரும் அறிந்தவிடயம்.

ஜனநாயகவழியிலான போராட்டங்கள் அத்தனையும், ஆயுதமுனையில் ஒடுக்கப்பட்டநிலையிற்றான், விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இது வரலாறு.

அதையுமே, அடுத்தடுத்து பதவிக்குவந்த ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் நயவஞ்சகமானமுறையிலேயே , புலிகளைப் பயங்கரவாதிகள் எனப் பரப்புரை செய்து ஒடுக்கினர் என்பது இன்று உலகமே அறிந்தவிடயம்.

இதனாற்றான், விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், உறுதியாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதன் முக்கிய அம்சம் : ‘ தற்காலிகமாக எமது ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன’ என்பதே.

அத்துடன், மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம், அந்தந்த நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும்வகையில் வீதிகளில் இறங்கிப்போராடுமாறும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இளைஞர்களிடம்தான் போராட்டம் கையளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இங்குநாம் கவனிக்கவேண்டியது, இளைஞர்களிடம்தான் கையளிக்கப்பட்டதே தவிர , இணைய தளங்களிடம் அல்ல.

அதாவது, ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட இந்த இடைவெளியில் , மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படாதிருக்கும்வகையிலேயே இது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இங்குள்ள பல ஊடகங்களை எதிரி தன்வசப்படுத்தும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தான்.

காணொளி ஊடகங்கள் எதுவுமே பலியாகாத நிலையில், பாரிஸிலிருந்து ஒளிபரப்பான GTV எனும் தொலைக்காட்சிநிறுவனம் மட்டும், தலைவர் மரணித்துவிட்டதாகச்செய்திவெளியிட்டு, ஒருவாரம்வரை துக்கவாரமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.
( இதுவே இளைஞர்களின் கண்டனத்துக்குள்ளாகி, இரண்டு நாட்களிலேயே துக்கவாரம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது வேறுகதை)






Sunday, May 21, 2023

 

புலம்பெயர்தேசத்தில் பிறந்த தமிழச்சியின் தமிழுணர்வு.


 இந்தியா முன்வைத்த 13ம் திருத்தத்தைத் தோலுரிக்கும், புலம்பெயர்தேசத்தில் பிறந்த தமிழச்சி!

Wednesday, May 17, 2023

சொல்லத்தான் நினைக்கிறேன்




சொல்லத்தான் நினைக்கிறேன் இது தலைப்பு - இத்தலைப்பில் 
எனதுள்ளக் கிடக்கைதனை - எனதுயிரில் கலந்துவிட்ட 
 எனது முதற்காதலியின் இனிமைதரும் நினைவுகளை 
இரைமீட்டுப் பார்த்திடவே இஃதெனக்கு நல்வாய்ப்பு!
 தன்னந்தனியாக தங்கச்சிலையாக 
என் அத்தைமகள் அன்று, என்முன்னே நின்றனளே! 
 பொன்னந்தி புதுநிலவு மதுமலரின் நறுமணமாம் 
அத்தனையும் அவள்பின்னே! அடியேனும் அவள்பின்னே! 

 முத்தாரம் சிரித்ததுபோல் முத்துப்பல் இதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 முத்தாரம் சிரித்ததுபோல் - அவளது முத்துப்பல் 
 அவள்செவ் - விதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 இந்த இனிமைதனை இயம்பிடவே இனியதமிழ் 
மொழியினிலேகூட வழியொன்றும் இல்லையன்றோ! 
 ஆனாலும், அதிற்பாதி அனுபவத்தையாகிலும்யான் 
அதையிந்த அவையினிலே சொல்லத்தான் நினைக்கிறேன்.

 சிப்பியவள் வாய்திறந்து முத்துமுத்தாய் மொழிந்தனளே..
 சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சக்தியெந்தன் பெயரென்றாள். 
 என்னத்தான் என்னத்தான் என்பெயரைக் கேட்டாயே 
உன்பெயரைச் சொல்லத்தான் என்னத்தான் என்றனளே. 

 என்பெயரை யான்சொல்ல ... இவள் என்னைத் தேடிவர... 
என்மனைவி பேயாக உருவெடுத்து இவளையும் என் 
உயிரையுமே ஒன்றாகக் குடித்துவிடுவாளன்றோ!
 - ஆதலினால் 

 பேதையவள் முகம்நோக்கிப் பின்வருமாறியம்புகிறேன் : 

 என்னாசைக் காதலியே! இளங்கிளியே
 - உனையன்றி 
வேறெவரை மணமுடிப்பேன்? விந்தையன்றோ உன்பேச்சு! 
 என்பெயரை நீயறிந்தால், சொல்வதற்கும் வாய்ப்புண்டு.

 நாயகனின் பெயர்தன்னை, நாயகியாள் உச்சரித்தல் 
ஆகாது என்பதுதான் மரபுமுறை! 
 - ஆதலின் அச் 
சிந்தனையை விட்டொழிக! இதுதான் என்முடிபு! 

 சாக்குப்போக்குடனே சல்லாபம் செய்தபடி 
நீக்கமற என்நெஞ்சில் நிறைந்திருந்த அவளழகைப் 
 பார்த்து இரசித்தேன்; பரவசமாய்ப் போயிருந்தேன் 
- நீர் 
கோர்த்த விழிகளுடன் நேரிழையாள் நின்றிருந்தாள். 

 என்னத்தான் உனையெந்தன் இதயத்தில் வைத்தேனே.. 
ஏதும் அறியாத எந்தனை ஏமாற்றாதே!
உந்தன்பெயர்தன்னை ஒழுங்காய்ப் பகர் என்றாள். 

 என்ன இழவிதடா! என்னும் சலிப்புடனே 
என்னைப் பிடித்த சனி ஏதோ தொலையட்டும் 
 என்று நினைத்தபடி எழுந்தேன் விரைவாக 
             - எழுந்தேன் விரைவாக 
 இதுதான் முடிவென்று சொல்லத்தான் நினைத்தேன்.. 
 ஆனால் அவள்முந்தி,தன்பேர் தமிழென்றாள். 

 ஆஹா! அன்றிலிருந் தின்றுவரை என்நெஞ்சில் 
அசையாமல் குடியிருக்கும் அவளா  நீ? - அடி! உன்னைத்
 தேடாத இடமெல்லாம் தேடியலைந்தேன் என்று
வாடாதமலர் அவளை வாரியணைத்தேன் உடனே!

 என்வீட்டில் யான் ஒன்று; என்மனைவி அவள் இரண்டு. 
இவள் வந்தால் அது மூன்று; இவளே வகை மூன்று

வல்லினமாய் மெல்லினமாய் வருடும் இடையினமாய்
 இயல் இசை நாடகமாய் எழிலின் உறைவிடமாய் 
இவள் வளர்ந்தசங்கம் அதுமூன்று!
- இவள்பெயரில் 
பறந்த கொடிகள் மூன்று, புலி மீன் வில் என்று 
இவள்பெருமை எளிதில் சொல்லும் தரமன்று. 

வாடும்பயிர் இதிலே வான்மழைக்குத் தடையேது? 
வாடாமலர் தமிழே! வந்துவிடு!  வந்துவிடு !!
வானம்வரை வளர்ந்து வையகத்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்தவளே வந்துவிடு என்னோடு!

என்றே அவளை உடன் கூட்டிவந்தேன் எனதில்லம்.
      என்றென்றுமே அவளின் வாழ்விடம் அஃதெனதுள்ளம்.
 - இதுகாறும் 
தடையின்றிவந்த தமிழாலே உங்களிடம் 
 விடைபெற்றுக் கொள்ளுகிறேன் வணக்கம் வணக்கம்.

( இது, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணம் கல்வியங்காடு சட்டநாதர் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,-
எனதூரான நாயன்மார்கட்டைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ´சொக்கன் ஆசிரியர்`  அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் யான் வாசித்தளித்த கவிதை)

வெளிநாட்டுப் பயணம்

                                 


நான் வேலைசெய்த நிறுவனம், காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு, வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தேன் என்பதுடன்  முடிந்ததல்லவா  முதற்பாகம்?

இனி என்ன செய்யப்போகிறேன் என்று, அடுத்த தலைப்பில் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன்?

அடுத்த தலைப்பு  ´வெளிநாட்டுப் பயணம்`  என்பதைத்தவிர, வேறெதுவாக இருக்கமுடியும்?

ஆனாலும், இந்த வெளிநாடு செல்லும் எண்ணம், உடனடியாக எனக்கு ஏற்படவேயில்லை. 

அஃதொரு விபத்தாகவே என்வாழ்க்கையில் குறுக்கிட்டது.

மீண்டும், அந்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, அங்கேயே தொடர்ந்து பணிசெய்யவே என்மனம்  விரும்பியது.

ஏறத்தாழ ஒரிருமாதங்கள்வரை, எவ்விதமான வருமானமும் இல்லாமலே எனது வாழ்க்கை தொடர்ந்தது..

ஏதோ ´கடனை உடனை..` என்பதுபோலக் காலம் நகர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

யாழ்.நகரின் நிலைமை சீராகிவிட்டது என்று அறிந்ததும், முதல்வேலையாக,  யாழ்.ஐக்கியவியாபாரச் சங்கக் கட்டடம் இருந்த இடத்தைநோக்கி ஆவலுடன் போனேன். அங்கே ஏமாற்றம்தான் எனக்கு மிஞ்சியது.

முற்றுமுழுதாக எரிந்தநிலையில், வெளிச்சுவர்கள் மட்டுமே, அதுகூட அரைகுறையாக நின்றதைக் கண்டு, மனம் சங்கடப்பட்டது.

அதன்கதைதான் முடிந்துவிட்டது; மெயின்ஸ்ரோர்ஸ்  ஆவது  இயங்குகிறதா என்று பார்ப்பதற்காக, கஸ்தூரியார்வீதிச் சந்தி நோக்கிப் போனேன்.

அந்தச் சிறிய கடையில் தொடங்கிய நிறுவனம்தான், மணிக்கூட்டுவீதிச் சந்தியில் கிளைவிட்டுப் பரந்துவிரிந்திருந்தது.

அதனால், அதை மெயின்ஸ்ரோர்ஸ்(Main stores) என்றும், இதை டிப்பார்ட்மென்டல் ஸ்ரோர்ஸ் (Departmental stores) என்றும் சொல்வோம்.

சுருக்கமாக M.S., D.S.என்பதுதான் நமது புழக்கத்திலிருந்தது.

 M.S.  இன் வாசலை அடைந்ததும் பெரிய ஆச்சரியமே காத்திருந்தது.

வழமைபோல, அங்கே  வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

" அட.. வாவா  வாவா வா.. எங்கையடாப்பா இவ்வளவுகாலமும் போனனி?"  

அதன் முகாமையாளர் வாய்நிறைய வரவேற்றார்.

" எனக்குத் தெரியாதையா இது நடக்குதெண்டு" 

" இடையில வந்து பாத்திருக்கலாமே.. எனக்கும் பில் கௌண்டருக்கு ஒரு ஆள் குறையுது. நாளைக்குக் காலம வாவன்.."

 எனக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  

பட்ட கடனை அடைக்கலாம் என்பதுமட்டும்தான் கண்முன்னே பளிச்சிட்டது.

பழம் நழுவிப் பாலில் விழுந்ததோ அன்றி பால் நழுவிப் பழத்தில் விழுந்ததோ என்பதுபோல, குழப்பமான மனநிலையிலிருந்தேன்.

´குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு குடுக்கும் ` என்று, நாட்டுப்புறத்துப் பேச்சுவழக்கில் சொல்வார்களல்லவா? .

அதற்காக இப்படியா?  ஒரேநொடியில், எனது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நன்றியுடன் எனது இசைவைத் தெரிவித்துவிட்டு வீடுவந்துசேர்ந்துவிட்டேன்.
மறுநாள் சொன்னபடி, காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தேன்.
அவரும் சொன்னபடி, மாதமுடிவில்  எனது சம்பளத்தைத் தந்துவிட்டார்.
ஆனால், போகப்போக ஒவ்வொரு வாரம் பிந்தியே கிடைத்தது. அப்படியே, நாலாவது மாதம் கிடைக்கவேயில்லை. 
" கொஞ்சம் இறுக்கமா இருக்கடாப்பா! உனக்கு மட்டுமில்லை; ஒருத்தருக்கும்... ஏன்?   எனக்கே இந்த மாதம் சிக்கல்லதான் நிக்குது. - சங்கடத்துடன் நெளிந்தார் முகாமையாளர்.
அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
அவரோ, தலையைக் கவிழ்ந்தபடி " ஒரு இடத்திலேருந்து கொஞ்சக் காசு வரவேணும்; அது வந்த உடன தாறன். குறை நினைக்காதை. ஆ"   -  அழாத குறையாகக் கெஞ்சினார்.
அடடா! மீண்டும் வேதாளம் முருக்கமரம் ஏறுகிறதா?
அதாவது, மீண்டும் கடன்படவேண்டும்.
இப்போதுதான் புரியத் தொடங்கியது - அவருக்கு ஏன் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று.
அவரிலும் தவறில்லை.
சிகரட், மலிபன் பிஸ்கட் , பாட்டா செருப்பு மற்றும் சவரின்பார் சவர்க்காரம் என்று, இன்னும் பல மதிப்புமிக்க பொருட்களின்  வினியோக உரிமையில் கிடைத்த வருமானம்,-
வெறும் உப்பு புளி மிளகாய் விற்றுக் கிடைக்குமா?

ஒரேயொரு சிங்களக் காடையன், பாட்டா செருப்பொன்றில்வைத்த நெருப்பு,எத்தனை குடும்பங்களை வாட்டிவதைக்கிறது...
இனியும் இதை நம்பியிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்.
எங்காவது, தனியார் கடைகளிலாவது வேலை தேடியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அடுத்தநாள் வேலைக்குப்போன எனக்கு, ஒரு பேரிடியே காத்திருந்தது.
இராணுவச் சீருடையில் ஒரு கும்பலே, எனது மேசையின் முன் வந்துநின்றது.
ஒரு காடையன், சிங்களத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டேயிருந்தான்.
எனக்கோ எதுவுமே புரியவிலை.  நான் விழிப்பதைக் கவனித்த மற்றவன் குறுக்கிட்டு,.
" நாம இப்போ சாமா கொண்டுபோறது; மாச கடசி காசுதாறது!"    என்று கொச்சையான தமிழில் சொன்னான்.
ஆஹா!  ´நல்ல கதை; ஆனால் நீளமில்லை` என்பதுபோலத்தான் இருந்தது அவனது பேச்சு.
உள்ளூரிலேயே யாருக்கும் அவ்வளவு இலகுவாகக் கடன் கிடைக்காது.
இவன்  எங்கே பிறந்தான். எங்கே வளர்ந்தான் என்று எதுவுமே தெரியாது. எடுத்த எடுப்பிலேயே கடன் கேட்கிறானே... இது சாத்தியமானதுதானா?
அதன் பொருள், அது கடனேயல்ல... கப்பம்தான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
விடுமுறையில் ஊருக்குப் போகும்போது, ஓசியில் மளிகைச்சாமான் கொண்டுபோக வழி கண்டுபிடித்த கும்பல் அது.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த முகாமையாளர்,  விரைவாக அவ்விடத்துக்குவந்து, "  என்னடப்பா? என்ன பிரச்சினை?" என்று கேட்டுக்கொண்டே, எனது பதிலுக்குக் காத்திராமல், அந்தக் கும்பலைநோக்கி, தன்னுடன் வரும்படி சைகை செய்தார்.
தமது மேசைக்கு அழைத்துச் சென்றவர்,  இருக்கையில்  அமர்ந்தபடி, அவர்களது மொழியிலேயே அவர்களுடன் பேச்சுக்கொடுத்தார்.
ஓரிரு நிமிடங்கள்தான் பேசியிருப்பார்..  பேசிக்கொண்டே தொலைபேசியை அவர் கையில் எடுக்கவும், அந்தக்கும்பலிலிருந்த ஒருவன், நஹி நஹி என்று அலறினான்.
தமக்குள் ஏதோ குசுகுசுத்துவிட்டு, அப்படியே நடையைக் கட்டிவிட்டார்கள்.

 

Saturday, April 22, 2023

யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலம் முன்னே, தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய வெடிகுண்டுத் தாக்குதல்.



அன்று மதியம் ஒருமணியிருக்கும்.
 எமது வியாபாரநிலையத்துடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்த  எரிபொருள் நிரப்புநிலையத்தின் அருகில், உதிரிப்பாகங்கள் விற்கும் கடையின் மேல்மாடியில், ஊழியர்கள் சிலர், உணவருந்திக்கொண்டிருந்தோம். 
அந்த எரிபொருள் நிரப்பு நிலையமும், உதிரிப்பாகங்கள் விற்கும் கடையும், நான் வேலைசெய்த வணிக நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான். 
அதைநாம் Motor Department என்று சொல்வோம். 
ஆம்! நான் வேலைசெய்தது: பழம்பெரும் நிறுவனமான ´யாழ்ப்பாணம் ஐக்கியவியாபாரச்சங்கம்`தான்! 

´பழம்பெரும் நிறுவனம்` என்றா சொன்னேன்?  ஆம்! அஃதுண்மைதான்! மாணவர்களின் பாடத்திட்டத்திற்கூட, இந்த நிறுவனத்தின் பெயர் வரும். அதாவது, 1925 ம் ஆண்டளவில்,´தனியார் யாருமே ´ஐக்கிய` எனும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது` என்று இலங்கையில் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள்.
அதை எதிர்த்து, இந்நிறுவனம் வழக்குத்தொடர்ந்தது. அது முன்வைத்த வாதம்: எமது நிறுவனம் தொடங்கியது 1917ம் ஆண்டு. எனவே நமக்கு இச்சட்டம் செல்லாது என்பதுதான்.
இது நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்நிறுவனத்துக்குமட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது  வரலாறு.

மதிய இடைவேளையில், அங்கே உணவருந்திக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா?
ஏறத்தாழ, அனைவரும் உணவருந்தி முடிந்தநிலையில்,எங்கிருந்தோ பெரியதொரு வெடிச்சத்தம் கேட்டது. அனைவரும் அதிர்ந்துபோனோம். 
நான் சக ஊழியர்களிடம் சொன்னேன் " இது சாதாரணமானதில்ல.. பெரிய பிரச்சினை வெடிக்கப்போகுது" என்று. 
போராளிகளுடன் எனக்கிருந்த தொடர்பு, அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதால்,உடனேயே அக்கட்டத்தைவிட்டு அனைவரும் வெளியேறினர்.
நான்மட்டும், எமது நிறுவனம் அமைந்திருந்த, மணிக்கூட்டுவீதி ஆஸ்பத்திரிவீதிச் சந்திவரை போய், இருபுறமும் சற்றே எட்டிப்பார்த்தேன்.
பருத்தித்துறைவீதிச் சந்தியிலிருந்து, ஒரு இராணுவத்தான் கண்டமேனிக்குச் சுட்டபடி ஓடிவந்துகொண்டிருந்தான்.
எனக்குப் புரிந்துவிட்டது; சிங்கள மகாவித்தியாலயப் பக்கம்தான் குண்டு வெடித்திருக்கிறது.
உடனடியாகவே நான் Motor Department  இற்கே திரும்பி, ஊழியர்களை எச்சரித்துக்கொண்டே, அடுத்து இருந்த நமது சேமிப்புக் களஞ்சியப் பக்கமாக ஓடினேன்.
அதை நாம்   Stores என்றுதான் சொல்வோம்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அதன் முகாமையாளர், கதவைத்திறந்து, அனைவரையும் உள்ளே போக அனுமதித்தார்.
 அனைவர் முகத்திலும் ஒருவிதமான அச்சம்கலந்த பரபரப்பு.
அனைவரையுமே மேல்மாடிக்குச் செல்லுமாறு முகாமையாளர் பணித்தார். அங்கேதான் பொதுமுகாமையாளர் உணவருந்தி ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் அங்கு பொதுமுகாமையாளரைக் காணவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்ததில், அங்கேயிருந்த மேசையொன்றின் கீழே அவர் பதுங்கிக்கொண்டிருந்தார்.
சின்னஞ்சிறிய மேசையின் கீழே, பென்னம்பெரிய‌ உருவம் கொண்ட அவர், தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு இருந்தகோலம், சிரிப்புக்கிடமாக இருந்தாலும், எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.
அனைவருமே மிரட்சிநிறைந்த விழிகளுடன், செய்வதறியாது திகைத்துநின்றனர்.
நான்மட்டும்,வெளியில் என்னதான் நடக்கிறது என்று அறியும் ஆவலில், ஆஸ்பத்திரிவீதிப் பக்கமிருந்த  சாளாரத்தினூடாக எட்டிப்பார்த்தேன்.
தூரத்தில், புயல்வேகத்தில் இராணுவ வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. மேலும் உற்றுப்பார்த்தேன்.
உள்ளே ஏராளம் இராணுவத்தினர். சாலையின் இருமருங்கிலும், மாறி மாறிச் சுட்டுக்கொண்டே வந்தனர். 
அதில் ஒருசிலர், அருகிலிருந்த கட்டடங்களுக்கு,  மேல்நோக்கியும் சுட்டனர்.
அதைத்தொடர்ந்து, ஒரு தொகுதி இராணுவத்தினர், ஆஸ்பத்திரி மதிலோரமாக‌,  ஆஸ்பத்திரியின் உள்நோக்கிச்  சுட்டபடி ஓடிவந்துகொண்டிருந்தனர்.
ஒருவேளை, போராளிகள் அங்கு  நிலைகொண்டிருக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அவர்கள் மேல்நோக்கியும் சுடுவதைக் கண்ட யான், சடாரென்று, சாளரத்தின் கண்ணாடிக் கதவுகளைச் சாத்திக்கொண்டேன்.
ஏனெனில், மேல்மாடியிலிருக்கும் நம்மையும் இது பாதிக்கக்கூடும்.. இல்லையா?
கதவு சாத்தும் ஒலியைக் கேட்டுத் திரும்பிய பொதுமுகாமையாளர், கோபத்தின் உச்சிக்கே போய் " விடுப்புப் பாக்க விரும்பினா, றோட்டில போய்நிண்டு பாக்கலாம்."  என்று கத்தினார்.
நான் அவருக்கு நிலைமையைப் புரியவைத்தேன்.
நான் சொல்லிமுடித்த மறுகணமே, அந்தச் சாளரத்தின் கண்ணாடிகள் சில நொருங்கிவிழுந்தன. 
கவச வாகனமொன்று நமது கட்டடத்தைக் கடந்துபோகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.
இனியும் அந்தமேசை தனக்குப் பாதுகாப்பளிக்காது என்பதைப் புரிந்துகொண்ட பொதுமுகாமையாளர், மிகுந்த சிரமத்துடன், அதனுள்ளிருந்து தன்னைத்தானே இழுத்தெடுத்தார்.
முழந்தாளிட்டுத் தரையில் அமர்ந்தபடி, கண்களை மூடி, தியானம் செய்வதுபோல, யோசனையில் ஆழ்ந்தார்.
ஓரிரு நிமிடங்களில் தியானம் கலைந்த அவர்,அந்த மேசையிலேயே ஊன்றி எழுந்தபடி, " கீழை ஸ்ரோர்சுக்குப் போய், பின்பக்கமா தப்ப வழியிருக்கோ எண்டு பாப்பம்"  என்றார்.
மீண்டும் சேமிப்புக் களஞ்சியத்துக்கே வந்துசேர்ந்தோம். 
இப்போது, கதவைத்திறந்து நிலைமை சரிதானா என்று பார்க்கவேண்டும். ஆனால், அனைவருமே தயங்கினர்.
திற‌ந்தவுடனேயே சூடுவிழுந்தால்...?  தற்கொலைப்படையாக மாற, யாருமே முன்வரவில்லை.
அங்கிருந்த வயதான ஊழியரொருவர், மிகவும் கவனமாக, இலேசாகக் கதவைத்திறந்து பார்த்தார்.
அப்படியே நிதானமாக, மீண்டும் சாத்திக்கொண்டார்.
" வெளியில ஆரையோ போட்டு அடிக்கிறாங்கள்"  
ஆர்?
வேற ஆர்..?  ஆமிக்காறங்கள்தான்!
தமது தோழர்கள் கண்முன்னே சிதறியதைக் கண்டதால் ஏற்பட்ட கோபத்தை, ஏதுமறியாத அப்பாவி வழிப்போக்கனில் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
இப்போது உள்ளே எங்கும் மயான அமைதி.. 
யார் முகத்தையும் பார்க்கும் நிலையில் யாரும் அங்கு இல்லை.
ஆனால்,  நான்மட்டும்  அங்கிருந்த மேசைமீது ஏறியிருந்தபடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
திடீரென்று மின்னல்போல, ஒன்று நினைவுக்கு வந்தது.
நான் வேலைசெய்த மேசையின் இழுப்பறையில், ( drawer ) எனது பணப்பையை ( wallet) எடுக்கமறந்துவிட்டேன். 
அதை எடுப்பதற்காக, உள்வழியினூடாகச் சென்றேன். 
எடுத்துக்கொண்டு திரும்பியபோதுதான் கவனித்தேன்: பாட்டா செருப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்த கண்ணாடியை, இராணுவத்தான் ஒருவன், துப்பாக்கியினாலேயே உடைத்துக் கொண்டிருந்தான்.
 அப்படியே பக்கவாட்டில் பதுங்கியபடி,  அவனைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.
உள்ளே இருட்டாக இருந்ததால், அவன் கண்களுக்கு நான் புலப்படவில்லை.
காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாட்டா செருப்புகளை எடுத்து, மிகுந்த சிரத்தையுடன், ஒவ்வொன்றாகக் கொளுத்தி உள்ளே வீசினான்.
முதலில், அந்தப்பிரிவின் முகாமையாளர் இருக்கையில் கிடந்த கோப்புகளில் (Files) தீ, பற்றிக்கொண்டது.
இன்னும் சிறிதுநேரம், அங்கு நான் தாமதித்திருந்தால்,  அவன் பற்றவைத்த நெருப்பின் ஒளியிலேயே என்னைக் கண்டிருப்பான். 
பிறகென்ன?  உள்ளேயிருந்த அத்தனைபேருமே, அந்த ஜெகஜோதியில் கலந்து நேரடியாகவே சொர்க்கத்துக்குப் போயிருப்போம்.
 வேறென்ன?   ஜீவசமாதிதான்!
இவ்வளவையும் பார்த்த நான், அங்கிருந்து மீண்டும் சேமிப்புக் களஞ்சியத்துக்கு வந்து, நடந்ததை அங்கிருந்தவர்களுக்குத் தெரிவித்தேன்.
இதைக் கேட்டதும், அங்கிருந்த அரைவேக்காடு ஒன்று, தீயணைக்கும் கருவியைத் ( fire extinguisher) தோளில் தூக்கியபடி கிளம்பியது.
" எங்கயப்பா போறை?"  முகாமையாளர் அதட்டும் குரலில் கேட்டார்.
 " நீ இப்ப அணைக்கப்போக, உள்ள ஆக்கள் நிக்கினம் எண்டு அவங்களுத் தெரிஞ்சல்ல போயிரும். விசர்வேலை பாக்காம வை உதில  கீழ"  
கிசுகிசுகும் குரலில், ஆனால் கடுமையான தொனியில் சொன்னார்.
ஒருபக்கம் எரியத்தொடங்கிவிட்டது என்பது தெரிந்தபின், அனைவர் முகத்திலும் மரணபயம் தொற்றிக்கொண்டது. உள்ளே இருந்தாலும் எரிந்து சாகத்தான் போகிறோம்.
வருவது வரட்டும் எனும் மனநிலையுடன், கதவைத் திறந்து வெளியேற அணியமானோம்.
மீண்டும் கதவைத்திறக்கும் துணிவு, அதே முதியவருக்குத்தான் வந்தது.
" ஒண்டையும் காணேல்ல.. ஏதோ கடவுள்ள பழியைப் போட்டு ஓடித்தப்புவம்.. வேற வழியில்ல..."   என்றவர், இன்னும் இரண்டடி வெளியில் போய். நன்றாகப் பார்த்துவிட்டு, சரி என்பதுபோலத் தலையை ஆட்டிக்கொண்டே மணிக்கூட்டுவீதிப்பக்கம் போகமுயன்றார்.
" அண்ணை! உதால போறது டேஞ்சர். உவங்கள் உங்கினேக்கதான் சுத்தித் திரிவாங்கள். எதுக்கும், பின்னால சைக்கிள் பார்க் பண்ணுகிற இடத்தால மதிலேறிக் குதிச்சுப் போவம்."  
சக ஊழியரொருவரின் யோசனையை ஏற்றுக்கொண்டு, அனைவரும் பின்பக்கமாக ஓடினோம்.
அந்த மதிலோ, இரண்டு மீற்றருக்கும் சற்றே அதிகமான உயரம்.
இளைஞர்கள் அனைவரும், தாவிக்குதித்து மதில்மேலேறிக்கொண்டோம். ஒருசிலரை, நானும் இன்னும் சில இளைஞர்களும் சேர்ந்து தூக்கி ஏற்றிவிட்டோம்.
அடுத்த பக்கத்தில் ஒரு தனியார் கல்விநிலையம் இருந்தது. அங்கே,மாணவர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில்  அமர்ந்து, சற்றே மூச்சுவாங்கினோம்.
" எட தம்பிமார்! ஒரு கைகுடுங்கோடா..."
மறுபக்கத்திலிருந்துவந்த குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போய்,  நானும் இன்னுமொருவருமாக மதிலில் ஏறிப்பார்த்தோம்.
அந்த முதியவர்தான் நின்றுகொண்டிருந்தார்.
" எங்கயண்ணை இவ்வளவும் நிண்டனியள்?" 
" கால்ல கல்லடிச்சுப் போட்டுதடாம்பி; அதுதான் இரத்தம் ஓடாமக் கையாலை பிடிச்சுக்கொண்டு நிண்டனான்"
அவரது கால் பெருவிரல் நகம் கிழிந்திருந்தது. அதிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டேயிருந்தது.
" சரி  சரி.. வாங்கோ முதல்ல..."
அவரது கையைப்பிடித்து, மதிலில் ஏற்றிவிட்டோம். ஏறிய மறுகணமே, அதே இடத்தில் மீண்டும் விழுந்துபோனார்.
 காலில் கல்லடிபட்ட வலியின் காரணமாக இருக்கலாம்.
இதைச் சற்றும் எதிர்பாராத நாம், ஏனையவர்களையும் உதவிக்கு அழைத்து, அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி, மறுபக்கத்தில் இறக்கிவிட்டோம்.
காயம்பட்ட அவரது கால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீங்கத்தொடங்கிவிட்டது.
விழுந்ததில், ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்னவோ...
´பட்டகாலிலே படும்`  என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!
 தெருவைக்கடந்தால் நேரெதிரே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை. 
        (Jaffna teaching hospital)   அதாவது, பெரியாஸ்பத்திரி. 
ஆனால், தெருவைக் கடப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா? 
அவரோ, வலிதாங்க முடியாமல் முனகிக்கொண்டேயிருந்தார்.
இப்படியே, ஒருமணிநேரம் கடந்துவிட்டது.
இப்போது வெளியில், தமிழ்ப்பேச்சுக் குரல்கள் கேட்டன. 
இராணுவத்தின் நடமாட்டம் இல்லையென்பதை அஃது உணர்த்தியது.
 அவசர அவசரமாக அந்த முதியவரைத் தூக்கிக்கொண்டுபோய்,சக ஊழியர்களின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். 
அப்படியே,ஆஸ்பத்திரி வாசலில்நின்று, அண்ணாந்து பார்த்தேன்.

அந்தக் கட்டடத்தின் ஒருமூலை மட்டும்தான் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. 
பஞ்சபூதங்களில் இரண்டு பூதங்கள், கூட்டுச்சேர்ந்து,  இராணுவத்தின் அட்டூழியத்துக்குத் துணைபோய்க் கொண்டிருந்தன.
அக்கினிபகவானுடன் வாயுபகவான் கைகோர்த்துக்கொண்டார்.
கண்ணும் கருத்துமாக, அந்த மூலைநோக்கியே அக்கினியை இழுத்துச்சென்றார்.
வாயுபகவானுக்கு அந்த மூலையுடன் ஏதோ பழையபகை போலும்.
ஏனைய பூதங்களில், ஆகாயம் பூமி என இரண்டுமே, மேலும் கீழும் நின்று வேடிக்கை பார்த்தன.
கடைசியாக உள்ள, ஆபத்பாந்தவரான, அந்தப் பூதத்தைமட்டும் கடைசிவரை காணவேயில்லை
அவர்தான் அந்த வருணபகவான். அவரைப்பற்றித்தான் நமது வள்ளுவப்பெருந்தகை அன்றே சொல்லிவிட்டாரே!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (அதிகாரம்:வான் சிறப்பு. குறள் எண்:15)

அவர் பெய்தும் கெடுப்பார்; பெய்யாமலும் கெடுப்பார்.
இப்போது, பெய்யாமல் கெடுக்கிறார். அவ்வளவுதான்!
அந்தாள், அன்று கண்ணுக்கெட்டியதூரம்வரை தென்படவேயில்லை.
அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் போலும்.
ஒருவேளை, இராணுவத்திடம் கையூட்டு வாங்கிருப்பாரோ? 
அவருக்கும் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினையோ?
அதெல்லாம் சரிதான்...
பஞ்சபூதங்கள் அத்தனையிலுமே, இறைவன் இருக்கிறாராமே...

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் 
போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்......

பக்திரசம் சொட்டச்சொட்ட, அழகுதமிழில், ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு, மணிவாசகப்பெருமான் அருளிய வரிகளல்லவா இவை!
அவர் குறிப்பிட்ட ,அதே பூதங்கள்தானா இவை? இருக்காது..
அன்பேயுருவான இறைவன், அட்டூழியத்துக்குத் துணைபோவாரா? 
 ஆயிரம் கேள்விகள் என்மனதில் அலைமோதின.
ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டதல்லவா ?
ஒருவேளை அது காலாவதியாகிவிட்டிருக்கக்கூடும்.
விரக்தியின் விளிம்புக்கேபோய், இறைவனையே எள்ளிநகையாடியது என்மனம்.

அங்கே அனைத்துப் பூதங்களும் ஒன்றிணைந்து, நமது நிறுவனத்தை ஒருவழி பண்ணிக்கொண்டேயிருந்தன.

அப்படியே மேல்மாடிக்கும்  பரவிய தீயில் , அங்கிருந்த தேங்காயெண்ணெய்ப் பீப்பாய், கோலாகலமாக‌ச் சீறிக்கொண்டே எரிந்தது. 
வேறுசில பொருட்கள், வாணவேடிக்கைபோல, வண்ணமயமாக எரிந்தன. ஒருசில பொருட்கள் வெடித்துச் சிதறின.
பத்தாண்டுகளாக என்னை வாழவைத்த நிறுவனம், எனது கண்முன்னேயே சாம்பலாகிக் கொண்டிருப்பதைக் கையறுநிலையில் பார்த்து வெதும்பினேன்.
 தொடர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என்னையும் அறியாமல் எனது இதயம் அழுதது. நெஞ்சு கனத்தது.   
தாங்கமுடியாமல், இருகைகளாலும் முகத்தைப் பொத்தியபடி, குமுறி அழுதேவிட்டேன்.
ஓரிரு நிமிடங்கள்வரை அழுதுகொண்டேயிருந்தேன். 
பின்னாலிருந்து  எனது தலையை யாரோ தடவுவதுபோல இருந்தது. 
திரும்பிப் பார்த்தேன்.
" சரி தம்பி! கவலைப்படாத கவலைப்படாத... இனி என்ன செய்யிறது? 
இப்ப வையெர் பிரிகேட்டுக்கு (fire brigade) அடிச்சாலும் வரமாட்டாங்களடா பயந்து.."   யாரோ ஒரு பெரியவர் எனக்கு ஆறுதல் சொன்னார்.
என்னைச் சுற்றிலும் ஒரு சிறிய கூட்டமே நின்றிருந்தது.
" தம்பி நீர் உங்க வேலைசெய்யிறீரோ?"  
" ஓமோம்! இவரை நான் செக்கிங் கௌண்டரில பாத்திருக்கிறன்."  
கேள்வியும் பதிலும் அங்கிருந்தே வந்தன.
இப்போது எனது மிதிவண்டியை எடுத்தாகவேண்டும். 
இல்லையேல், எப்படி யான் ஊர்போய்ச் சேர்வது? 
மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்தைநோக்கி விரைந்தேன். 
நல்லவேளையாக, இன்னமும் அந்தப் பகுதிக்குத் தீ பரவவில்லை. 
புத்தம்புதிய எனது மிதிவண்டி, தன்னந்தனியாகத் தனது எசமான் வரவைக் காண‌த் தவமிருந்தது.
பூட்டைத்திறந்து அதை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதுதான் கவனித்தேன்: முன் சக்கரம் முழுமையாகக் காற்றுப் போய்விட்டிருந்தது.
என்னைக் காணவில்லையே என்று அது,  ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கும்போலும்...
எனக்கோ மிகவும் சோர்வாக‌ இருந்தது. 
கடைகளெல்லாம் பூட்டப்பட்டிருந்ததால், தேநீர்கூட அருந்த வழியில்லை.
இந்தக் களைப்புடன், மிதிவண்டியை வேறு தள்ளிக்கொண்டுபோகவேண்டும்.
விதியை நொந்துகொண்டேன்.  
அதைத்தவிர, எதைத்தான் செய்யமுடியும்?
 மிதிவண்டியின் கைபிடியைக் கையால் ஏந்தி,  காற்றுப்போயிருந்த சக்கரத்துக்கு நோகாதபடி, இழுத்துக்கொண்டே ஆஸ்பத்திரிவீதி நோக்கி நடந்தேன்.
அங்கே ஒருசில இளைஞர்கள், தீ பரவாத இடங்களிலுள்ள பொருட்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். 
அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது, அவர்கள் போராளிகள் என்று.
 அவர்கள் குண்டு வைப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வ‌தில்லை; மாறாக, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுபவர்கள் என்பது பரவலாக அனைவரும் அறிந்த விடயம்தானே! 
அதேவேளை, அங்கு கூட்டமாகவந்த நடைபாதை வியாபாரிகள்சிலர், இவர்கள் மீட்ட பொதிகளைத் தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத்தலைப்பட்டனர்.
" ஏய்! எங்கை கொண்டு போற?" 
"  நீ எங்க கொண்டுபோவியோ அங்கதான்"  
அந்த நடைபாதைவியாபாரி, நடந்துகொண்டே, எள்ளலாகப் பதிலளித்தான்.
வெகுண்டுபோன போராளி, புலியாகவே மாறி, அவன்மீது பாய்ந்தான்.
 அந்த இடமே, ஒரு மினி யுத்த களமாக மாறிப்போனது.
சிறிதுநேரக் கைகலப்புக்குப்பின், நடைபாதைவியாபாரிகள் நடக்க நேரமின்றி ஓட்டம்பிடித்தனர்.
இன்னுஞ்சிறிது தூரத்தில், மிதிவண்டிகளை, வலித்து வலித்து மிதித்துக்கொண்டு, இந்த நோக்கத்தில்வந்த இன்னுமொரு கும்பல், இவர்களின் நிலைமையைக் கண்டதும்,  about turn என்பதுபோல, மிதிவண்டிகளைத் தூக்கித் திருப்பிக்கொண்டு, அதே வேகத்தில் ஓடிமறைந்தது.
இந்தக் களேபரத்தினால், போராளிகளின் மீட்பு முயற்சியும்  பிசுபிசுத்துப்போனது. 
இனியும், அங்கு நின்றால், அந்த ந.பா.வியாபாரிகளே இராணுவத்தை அழைத்துக்  காட்டிக்கொடுக்கவும்கூடும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

இப்போது,யான் வீட்டுக்குப் போய்ச்சேரவேண்டுமானால், எனது மிதிவண்டிக்கு உயிர்கொடுத்தாகவேண்டுமே....
மிட்டாஸ்கடைச் சந்தியிலுள்ள,  எனது உறவினரொருவர் மிதிவண்டி திருத்தும் கடையைநோக்கி நடந்தேன்.
ஏறத்தாழ, இரண்டு கிலோமீற்றர் தூரம்வரை நடந்துபோய்ப் பார்த்தால், அதுவும் பூட்டியிருந்தது.
சரி.. இனி என்ன செய்யலாம்.. வீடுவரை நடக்கவேண்டியதுதான் என்று சலித்துக்கொண்டே நடந்தேன்.
இந்தநிலையில்,  போட்டிருந்த செருப்பும் வழியில் அறுந்துபோனது.
அடடா! இன்னலுக்கு மேல் இன்னல்!
` இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்திலறிவாய்`  
மட்டுநகர் தந்த தமிழ்க்கருவூலம், சுவாமி விபுலானந்த அடிகளார் எழுதிய , யூலியஸ் சீசர் தன்மனைவிக்குச் சொல்வதாக வரும்  கவிதை வரிதான் நினைவுக்கு வந்தது.
மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
பாட்டா செருப்புக்கு, வடமாகாணத்துக்கே வினியோக உரிமைபெற்ற நிறுவனத்தின் பணியாளரான யான், அறுந்த பழைய செருப்பைக் கையில் தூக்கியபடி  அன்று, ஒருவழியாக வீடுவந்து சேர்ந்துவிட்டேன். 
ஆனால், எனது வாழ்வாதாரம்தான் சாம்பலாகிவிட்டதே!
இனி என்ன செய்யப்போகிறேன்?
அடுத்த தலைப்பில் சொல்கிறேனே...

Thursday, March 12, 2020

இஞ்சி சட்னி
இந்த இஞ்சி சட்னியை வேலூர் மாவட்டம் பகுதிகளில் ஆலம் பச்சடி என்று கூறுவர். மிகுந்த சுவையுடையது , இதை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம், இட்லி , தோசை, பொங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதன் சுவையில் நமது நாவு தாண்டவம் ஆடும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி 2 1/2 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
புளி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
பூண்டு 2 பற்கள்
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தாளிக்க
மரச்செக்கு கடலெண்ணய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
சீரகம் 1/4 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
வரமிளகாய் 1
செய்முறை
1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் உப்பை தவிர அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.
3. பிறகு மிக்ஸியில் நன்றாக வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களையும் , புளி கரைசல், தேவையான அளவு உப்புத்தூளையும் , தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் 1 தேக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல , கடுகு, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு , வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்கி அதை இஞ்சி சட்னியில் சேர்த்து நன்றாக கிளறவும்.

Sunday, March 1, 2020

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!
*************************************
 நீண்டகால இடைவெளிக்குப்பின், என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள். ஜேர்மனிக்கு வந்த புதிதில், என்னுடன் மட்டும்தான் நெருக்கமாக‌ப் பழகுவாள்.அடிக்கடி ஏதாவதொரு சாக்கில் வீட்டுக்கு வரவும் செய்வாள்.மிகவும் நல்லவளாகத்தான் தெரிந்தாள். ஆனால், காலப்போக்கில் அவளது நடவடிக்கைகளில் பாரிய மாறுதல் தெரியத்தொடங்கியது. வயதான ஜேர்மானியப்பெண்ணொருத்தியுடன்,பொது இடங்களில் மது அருந்தியதைக் கண்டதாகவும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.
 முதலில் நான் அதை நம்பவில்லை.ஒருமுறை அவள் எனது வீட்டுக்கு வந்திருந்தபோது, பட்டும்படாமல் அதுபற்றி அவளிடம் உசாவினேன்.
அவளோ, மிகவும் வெளிப்படையாகவே அதை ஒப்புக்கொண்டது மட்டுமன்றி,‍_
 " அதென்ன...ஆம்பிளையளெல்லாம் விரும்பின வாழ்க்கையை வாழலாம்; பொம்பிளையளெண்டாமட்டும் ஓராயிரம் கட்டுப்பாடு..இஃதென்ன சிறிலங்காவே?  ஜேர்மனி. இங்கை யாரும் விருப்பம்போல வாழலாம்"  என்று பொங்கினாள்.
இதை யான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை என்னை எதிர்த்தே பேசாதவள், அன்று பெருங்குரலெடுத்துப் பெண்ணியம் பேசினாள்.
இவள் ஜேர்மனிக்குவந்து, முழுமையாக மூன்றுமாதங்கள்கூட முடியவில்லை; ஜேர்மனியைப்பற்றி எனக்கே பாடம்நடத்த வந்துவிட்டாளே... கோபத்தைவிடவும் சிரிப்புத்தான் அதிகமாகவந்தது.
ஜேர்மனியிலும் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் உண்டு. நல்ல மனிதர்கள் உண்டு. 
நெல்மணிகளில் பதர்போல, நல்லவைகளுள் ஒருசில‌ கழிசறைகளும் கலந்திருப்பது இயல்புதானே?
சாற்றினை ஓடவிட்டு, சக்கையைப் பிடித்து வைத்துக்கொள்ளும் பன்னாடைபோல, அந்தக் கழிசறையைமட்டும் வைத்துக்கொண்டு ஜேர்மனியையே அளக்கிறாளே...
பன்னாடை பன்னாடை...  மன‌துக்குள் திட்டிக்கொண்டேன்.
இனி, இவளுடன் பேசிப் பயனில்லை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, பக்குவமாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்_ இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம் என்று.
இந்தநிலையில்தான் மீண்டும் ஆறுமாதங்கள் கடந்தபின்பு தொலைபேசியில் அழைத்தாள்.
" அங்கிள், நான் மாலினி கதைக்கிறன்.."  அவள் குரலில் தயக்கம் தெரிந்தது.
அந்தப்பெயரைக் கேட்டதும், எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. உடனடியாகவே இணைப்பைத் துண்டித்துவிடலாமா என்றும் யோசித்தேன். எனது மௌனத்தில் அவளுக்கு அது புரிந்திருக்கவேண்டும்.
அவசர அவசரமாகச் சொன்னாள்: "அங்கிள்! போனைக் கட்பண்ணீடாதேங்கோ பிளீஸ்.."
" ம்ம்ம்.. சொல்லு. என்ன விஷயம்?"
ஒருசில நொடிகள் மௌனத்தின்பின் இலேசானதொரு விம்மலுடன் தொடங்கினாள்:
" இதை என்னெண்டு உங்களுக்குச் சொல்றதெண்டுதான் யோசிக்கிறன் அங்கிள்..!"
" இஞ்ச வா பிள்ளை! எனக்கு நிறைய வேலையிருக்கு..சொல்றதைச் சுருக்கமாச் சொல்லு.என்ன விஷ்யம்?" மீண்டும் அழுத்திக் கேட்டேன்.
" பெத்த தகப்பனைப்போல, நீங்க எனக்கு எத்தின புத்திமதியெல்லாம் சொன்னீங்க.. ஆனா நா எதையுமே கேக்காம , இப்பிடியொரு பிரச்சினையில சிக்குப்பட்டுப்போனன் அங்கிள்.."  விக்கல் விம்மல்களுக்கிடையில் துண்டுதுண்டாக, இவ்வளவையும் சொல்லிமுடித்தாள்.
அதன்பிறகு அவள் சொன்னவைகள் எதுவுமே எனக்குப் புரியவில்லை.
கேவிக்கேவி அழுதுகொண்டேயிருந்தாள்.முடிவில் பெருங்குரலெடுத்தே அழத்தொட‌ங்கிவிட்டாள்.
´ஒருவேளை தண்ணி கிண்ணி போட்டிருப்பாளோ?` இப்படியான குறுக்குச்சிந்தனை என்மனதில் எழுந்தது. சினத்துடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
ஊரில்,இவளது குடும்பத்தையே நான் அறிவேன்.இவளுக்கு இன்னும் நான்கு சகோதரிகள் உண்டு. பெரிய குடும்பம்..
வறுமை காரணமாக, 15 வயதுச் சிறுமியான இவளை,  18 வயதான போலிக்கடவுச்சீட்டில் ஜேர்மனிக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள் இவளது பெற்றோர்.
இங்கு அனைவருக்குமே அவள் 18 வயதுப் பருவக்குமரிதான். ஆனால்,நான் அவளது குடும்பத்தையே அறிந்தவன் அல்லவா?
எனினும், எனக்கு இது தெரிந்ததாக, அவள் உட்பட யாரிடமும் நான் காட்டிக்கொண்டதில்லை. ஏதாவதொரு காரணத்திற்காக, அவள் நாடுகடத்தப்பட்டால்,என்மீது பழி விழுந்துவிடும் என்பதால், அதில் மிகவும் கவனமாகவே இருந்தேன்.
மீண்டும் தொலைபேசி அலறியது. அவளாகத்தான் இருக்கும் எனும் நினைப்பில்,அதை அப்படியே அலறவிட்டேன்.
´இவள் என்னை ஒரு வழிபண்ணாமல் விடமாட்டாள் போல இருக்கே..எனக்குத் துளியும் தேவையில்லாத பிரச்சினை இது. என்னைக் கேட்டா ஒவ்வொன்றும் இவள் செய்தாள்?` 
வெறுப்புடன் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
திடீரென்று மின்னலாக ஒன்று என் புத்தியில் உறைத்தது:
´ஒருவேளை, நாடுகடத்தும் செய்தி கிடைத்திருக்குமோ?அதனால்தான் இப்படி அழுகிறாளாக்கும்.
அப்படி, இவள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் குடும்பமே தற்கொலை செய்வது மட்டும் நிச்சயம்.
சரி.. எதற்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோமே` என்ற முடிவுடன், தொலைபேசியை எடுத்தேன்.
மறுமுனையிலிருந்து ஒரு ஜெர்மானிய‌ப்பெண்ணின் குரல் கேட்டது.
`அடச்சீ! இவளா! அந்தப் பன்னாடைக்காக, கூட இருக்கிற‌ பன்னாடை வருகுதுபோல‌ வக்காலத்துக்கு.` அருவருப்புடன் நெளிந்தேன்.
ஆனால், வந்தது அந்தப் பன்னாடை அல்ல!
மாறாக, இந்த நகரத்திலேயே புகழ்பெற்ற சட்டத்தரணியான இங்க்ரிட்  மாயா என்ற இளம்பெண்.
இங்க்ரிட் மாயாவைப்பற்றிச் சுருக்கமாகச் சொன்னால்,_
முப்பதே வயதான, வனப்புமிக்க ஜெர்மானிய இளமங்கை.
தமிழர்தம் வாழ்வியலின் இரசிகை.இயற்கையின் நிரந்தரக் காதலி.
இந்த இயற்கையின்மீது கொண்ட காதலினாலேயே,கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்றவள்.
அதாவது, அவள் கணவனுடன் குடியிருந்த வீட்டின்முன், மரமொன்றை நடுவதற்காக, நகர நிர்வாகம் முயன்றபோது, அதை,கணவன் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட பிணக்கு, மணமுறிவுவரை போய்விட்டது.
தொலைபேசியில் என்னை அழைத்த இங்க்ரிட்,முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்றும், தனது வீட்டுக்கு வரமுடியுமா என்றும் கேட்டாள்.
´என்னவாயிருக்கும்?` என்ற குழப்பத்துடன், அடுத்த பத்தே நிமிடங்களில் அங்கு நின்றேன்.
என்னை வரவேற்று அமரவைத்தவள் முகத்தில் சற்றே இறுக்கம் தெரிந்தது.
எடுத்த எடுப்பிலேயே "மாலினியைப்பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்: .
அவள் கேட்ட தோரணையில், ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது
எனக்குப் புரிந்துவிட்டது.
நீண்டகாலத்தின்பின் மாலினி தொலைபேசியில் அழைத்ததையும், ஏதோ சிக்கல் என்று மட்டும் சொல்லிவிட்டு அழுதுகொண்டிருந்ததையும் சொன்னேன்.
"  அவள் கர்ப்பமாக இருக்கிறாள்; அதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றத்தில்தான் அழுதிருக்கிறாள்போலும்."
´என்னடா இது! இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாள்...`  அதிர்ச்சியில் உறைந்தேன்.
அந்த ஏழைக்குடும்பத்தின் நிலைதான் என்கண்முன்னே நிழலாடியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னரே, அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டாள் இங்க்ரிட்.
" அதற்குக் காரணம் யார் தெரியுமா? குணாதான்"
அதிர்ந்து போயிருந்த என்னை,இது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குணா என்று இவள் குறிப்பிடுவது,மணவிலக்குப் பெற்றபின், இவளுடன் ´ஒன்றாக வாழ்தல்`  ( Living together)  எனும் முறையில், சேர்ந்துவாழும் ஒரு தமிழ் இளைஞன்.
குணாவின்மீது எனக்குக் கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
´அட‌ நாயே! உனக்குத்தான் வெள்ளைப்பணியாரம் கிடைச்சுட்டுதே.. அதுக்குப்பிறகும் ஏண்டா அந்த ஏழைக்குடும்பத்தைச் சீரழிச்சே..?` கொச்சையாகவே மனதுக்குள் திட்டினேன்.
இங்க்ரிட் தொடர்ந்தாள்: " மாலினிக்கு நான் உதவிசெய்யலாம் என்று நினைக்கிறேன். சட்டப்படி இதைக் கையாண்டு, குணாவுக்கே அவளைத் திருமணம் செய்துவைக்கவேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?"  என்றபடி என்முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
தலையைக்குனிந்தபடி நெற்றியைப் பிசைந்துகொண்டே நான் பலத்த யோசனையில் ஆழ்ந்தேன்.
சட்டப்படியான நடவடிக்கை என்றால்,இருவருக்குமே கொழும்பிலிருந்து ´திருமணமாகாதவர்கள்` எனும் சான்றிதழ் பெற‌வேண்டும். அப்போது, மாலினியின் வயது தெரியவருமே..
 இனியும் இதை மறைப்பது நல்லதல்ல... என்மனதினுள் எழுந்த போராட்டத்துக்கு, நானே தீர்வையும் கண்டுபிடித்தேன்.
" என்ன கடுமையான யோசனை? இதில் உனக்கொன்றும் பிரச்சினை வராது.மொழிப்பிரச்சினைக்காகத்தான் உன்னைக்கூப்பிட்டேன். நான் சொல்கிறதை, அவளுக்குப் புரியவைத்துவிட்டால் போதும். பாவம். அவள் சின்னப்பெண்தானே...
" சின்னப்பெண் அல்ல! அவள் சிறுமி. அதைத்தான் சொல்லலாமா விடலாமா என்று யோசிக்கிறேன்" என்னையுமறியாமல் கக்கிவிட்டேன்.
" உண்மையாகவா?"  ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. இப்போது, அவள் கடுமையான யோசனையில் ஆழ்ந்தாள்.
 ஓரிரு நிமிடங்கள் அங்கு நிலவிய அமைதியை, அவளே குலைத்துக்கொண்டு பேசத்தொடங்கினாள்.
" சரி.. இப்போதைக்கு, ஜேர்மனியைப் பொறுத்தவரை அவளது வயது 18 ஆகவே இருக்கட்டும். ஆனால், குணா இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்.  இன்னும் மூன்று ஆண்டுகளின்பின், முறையாக இருவருக்கும் திருமணம் செய்துவைப்போம். அதுவரை, மாலினி எனது அம்மா வீட்டில் இருக்கட்டும். அம்மா அவளை நன்கு கவனித்துக்கொள்வாள்.என்ன சொல்கிறாய்?"  என்றவாறு என்முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.
அவளைப் பெருமையுடன் பார்த்தேன்.
இரண்டு பன்னாடைகளுக்கு மத்தியில், ஒரு பாலுண் குருகு இவள்!
எனது சம்மதத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வீடுதிரும்பினேன்.

Tuesday, February 18, 2020

போர்க்குற்றமா?இனப்படுகொலையா?


#1958
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1974
தமிழாராய்ச்சி மாநாடு
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1977
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1983
கறுப்பு ஜூலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1984
சுன்னாகம் சந்தை
ஒதியமலை
செட்டிக்குளம்
மன்னார்
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1985
வட்டக்கண்டல்
குமுதினிப்படகு
வல்வெட்டித்துறை
தம்பட்டை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1986
கிளிவெட்டி
உடும்பன்குளம்
அக்கரைப்பற்று
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1987
இறால்பண்ணை
கொக்கட்டிச்சோலை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1990
கல்முனை
திராய்க்கேணி
வீரமுனை
கிழக்கு பல்கலைக்கழகம்
வந்தாறுமூலைப்பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
சத்துருக்கொண்டான்
சாவகச்சேரி சந்தை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1991
கொண்டச்சி
ஏறாவூர்
இருதயபுரம்
நாயன்மார் திடல்
கொக்கட்டிச்சோலை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1992
பொலன்னறுவை
மயிலந்தனை
பாலியாவெட்டை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1993
கிளாலி
வண்ணாத்தி ஆறு
கல்வியங்காடு
யாழ்ப்பாணம் கடல்நீரேரி
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1995
புல்மோட்டை
நவாலி தேவாலயம்
நாகர்கோயில் பாடசாலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1996
செம்மணி
குமாரபுரம்
கிளிவெட்டி
திருகோணமலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1998
தம்பலகாமம்
புதுக்குடியிருப்பு
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2000
பள்ளிக்குடா
சிலாவத்துறை
கொழும்புத்துறை
மிருசுவில்
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2006
திருகோணமலை
அல்லைப்பிட்டி
பேசாலை
மூதூர்
செஞ்சோலை
வாகரை
தாண்டிக்குளம்
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2007
படகுத்துறை
இலுப்பக்கடவை
#2009
தர்மபுரம் வைத்தியசாலை
வல்லிபுனம் வைத்தியசாலை
சுதந்திரபுரம்
உடையார்கட்டு மருத்துவமனை
புதுக்குடியிருப்பு மருத்துவமனை
பொன்னம்பலம் மருத்துவமனை
புதுமாத்தளன்
வலையன்மடம்
முள்ளிவாய்க்கால்
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
இனப்படுகொலை என்று சொல்ல
இன்னுமா வேண்டும் ஆதாரம்?
உலகம் எங்களை மறக்கச்சொல்கிறது!
மன்னிக்கவும் சொல்கிறது!!!
எதை மறப்பது?
எதை மன்னிப்பது????

Friday, May 13, 2016


இந்தநாள் கொடியநாள்
              எங்களின் துயரநாள்

இந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்
சிங்களம் எங்களின் சொந்தமண் தன்னிலே
எங்களைப் படுகொலை செய்தநாள்!
             - தீயில்நாம் வெந்தநாள்!
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
       - நீதியைத்தேடியே மேலைநாடெங்கிலும்
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
விலையிலா உயிர்களை
கொலைவெறிச் சிங்களம்
                   - கொன்றநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!
தள்ளிநின் றுலகமே தமிழனின் தலைவிதி
     தன்னையே நிர்ணயம் செய்தநாள்!
கொள்ளிவாய்ப்பேயுன் கோடரிக்காம்புகள்
        கூடியே ரத்தம்கு டித்தநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!

இந்தநாள் மீண்டும் வந்ததே இன்று –
இன்றுடன் ஏழு ஆண்டுகள் கண்டு!
இன்னமும் இங்கு கூடியே நின்று
பெட்டைப் புலம்பலின் பேதமை கொண்டு
நெட்டை மரங்களின் நீர்மையில் நின்று
வாளா விருப்பது முறையோ? முறையோ?
என்னுயிர்த் தோழா! எழுந்துநீ வாடா -
எதிரியின் சதிகளின் வலைகளை வென்று!
பெற்றவள் கதறி அழுகிறாள் அங்கே!
பேடிகள் போலநாம் வாழ்கிறோம் இங்கே!
ஆடியோ கருமை ; ஆவணி அமளி
ஐப்பசி, கார்த்திகை அதனிலும் கூட
சத்திய நாதனின் சாவினைக் கண்டோம்!
ஆண்டுகள் முழுதும் அத்தனை பொழுதும்
மாண்டவர் நினைவிலே மாரடிக் கின்றோம்.
எத்தனை காலம்தான் இப்படி வாழ்வோம்?
செத்தவர்க் காகநாம் என்னதான் செய்தோம்?
வெறுமனே கூடி தீபங்கள் ஏற்றி
ஏற்றிய தீபம் அணையுமுன் கலைவோம்!
வேற்றின மாந்தர் வீடுகள் தனிலும்
ஏறுதுதானே இத்தகை தீபம்?
அதுவெறும் தீபம். -  நாமிவண் ஏற்றும்
தீபமோ எங்கள் உணர்வினைச் சாற்றும்
உயிரில் தீமூட்டும் உறுதியைக் காட்டும்.
வேரடி மண்ணின் விறலினைக் கூட்டும்.
விடியலை நோக்கி விரலினை நீட்டும்.
ஏற்றுவோம் இங்கே இம்முறை மட்டும்!
மறுமுறை ஏறும் நம்தமிழ் மண்ணில்!!!
                                                    ஆக்கம்
                                               ---சிவம் அமுதசிவம்

Saturday, October 5, 2013

 ****-__ விகனின் விகடம்-__****

பொதுவாகவே தமிழ்நாட்டின் சஞ்சிகைகள், தினசரிச் செய்தி நிறுவனங்களெல்லாம், -
தமக்குள் தாமே இரண்டாகப் பிரிந்து, ஒன்று அரசுக்கு ஆதரவாகவும், மற்றையது எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் எழுதும் போக்குடையவை.  
( விகடன் - ஜூனியர் விகடன்)
அவர்களின் குறிக்கோள்: இரு பக்கத்திலும் தாமே முன்னணிவகிக்கவேண்டும்....
தாம்மட்டுமே சம்பாதிக்கவேண்டும்  என்பதே!
அந்தவகையில், விகடன் சஞ்சிகையானது , அண்மையில் புலிப்பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டு, அதன்மூலமே நன்றாகச் சம்பாதித்தமை யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பிரபல எழுத்தாளரான யமுனா ராஜேந்திரனை விலைக்கு வாங்கித் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது!
நடுநிலையாக எழுதியிருக்கிறாராம்...
இவர்களே அதற்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
இப்படித்தீர்ப்பு வழங்குமளவுக்கு, விகடனுக்கோ அன்றி இந்த யமுனாவுக்கோ, -
புலிகளின்மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணிபற்றி எதுவுமே தெரியாது.
இவர் புலிகளில் சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்!:

##சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு.##

சகோதரப்படுகொலை என்று, சகட்டுமேனிக்கு,  கருணாநிதி பாணியில் குற்றஞ்சாட்டும் இவர்,-
உண்மையிலேயே ´நடுநிலையாளராக இருந்தால், -
 அதன் பின்னணிபற்றியும் ஆராய்ந்திருக்கவேண்டும்.

*** ஆதிக்கவெறிபிடித்த இந்தியத் தலைமைகள், மிகவும் திட்டமிட்டமுறையில், பல கோடிகளைச் செலவுசெய்து, தமிழீழத்தில் பல போராளிக்குழுக்களை உருவாக்கியமை....
அந்தக் குழுக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கி வளர்த்துவிட்டமை....***

என்று இவைகளையெல்லாம் புறந்தள்ளி, வெறுமனே பார்ப்பனரின் குரலாகவே ஒலித்திருக்கிறார் இந்த யமுனா ராஜேந்திரன்!

2. ராசீவ் கொலை என்று பார்த்தால், -
சூ சாமி சந்திராசாமி என்று, இதில் சம்பந்தப்படிருக்கும் பல ஆசாமிகள் இன்னமும் விசாரிக்கப்படாத நிலையிலும்,-
இறுதித்தீர்ப்பே இன்னும் வராத நிலையிலும், இவ்வாறு புலிகளின்மீதே பழியைப்போடுபவருக்குப் பெயர்தான் நடுநிலையாளரோ?
3. யாழ். மண்ணைவிட்டு முசுலிம்களை வெளியேற்றியமை என்பது தவறுதான் எனக்கொண்டாலும், -
அந்தக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாததொன்றாகவே அஃதிருந்தது!
யாழ்ப்பாணத்தில் வசித்த முசுலிம்கள், போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் செய்யாமலிருந்தது மட்டுமல்லாமல், -
அரச படைகளுக்காக உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். இலுள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றிலிருந்து, பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, -
யாழ் மக்களுக்கும் முசுலிம்களுக்குமிடையிலான முறுகல்நிலை அதிகரித்தது.
பெரும் மோதல் உருவாகி, அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அன்று அப்படியானதொரு முடிவைப் புலிகள் எடுத்தனர்!
அதாவது, ஒரு நாடு எவ்வாறு அவசரகால நடவடிக்கை எடுக்குமோ, -
அதேபோன்றதொரு நடவடிக்கைதான் அது!
இன்னும் சொல்லப்போனால், -
´இந்திய குடிமக்களைத் திருப்திப்படுத்த`என்று நியாயம் கற்பித்து , எவ்வாறு கசாப் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதோ, -
அதுபோல...
ஒருதலையாகவே சிந்தித்தவரெல்லாம் நடுநிலையாளர் என்று, போக்கிரி வியாபாரிகள் பட்டம் கொடுக்கிறார்கள்!
இதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது?


Tuesday, November 6, 2012

விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


முந்நாள் விடுதலைப்புலிப் போராளி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்,
தனது வயிற்றுப் பசி தீர்க்க,பாலியல் தொழில் செய்து  உயிர் வாழ்வதாக,
´விகடன்` குழுமப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை பல வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஏற்கெனவே,பல அறிஞர்கள் இந்த விகடனின் முகத்திரையைக்
கிழி கிழியென்று கிழித்தேவிட்டார்கள்!
எனினும், எனது மனதிற் தோன்றும் கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இதை வெறுமனே ஒரே கோணத்தில் பார்க்காமல் வெவ்வேறு வகைகளில்  நோக்கவேண்டியுள்ளது.

உண்மையில், அப்படியொரு பெண் இருந்து, அவரே இப்பேட்டியை அளித்திருந்தால்,
1.இவர் சொல்வது பொய்..
2.இயக்கத்துக்கும் உண்மையில்லாமல், தமது குடும்பத்துக்கும் உண்மையில்லாமல்
 அவ்வளவு காலமும் ஒரு போராளியாக நடித்திருக்கிறார்.

அல்லது,
3.  இந்த விகடன் குழுமமே, தனது வியாபாரத்தில் ஏற்பட்ட தற்காலிகமான தொய்வைச் சரிசெய்வதற்காக
இப்படியொரு கற்பனைக்கதையை உருவாக்கியிருக்கிறது.

இம்மூன்று தேர்வுகளிலுமுள்ள முதலிரண்டு நேர்மறையான கருத்துகளைப்பற்றி முதலில் ஆராய்வோம்.

இந்தப்பேட்டி அளித்ததன் மூலம் இப்பெண் யாருக்கு என்ன நன்மை செய்ய முயன்றிருக்கிறார் என்று ஆராய்ந்தால், -
யாருக்கும் எதுவுமில்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.

தமது வயிற்றுப்பசி தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளியானதாகக்கூறும் இவர்
 வெறுமனே,பத்திரிகைக்காரரின் பசி தீர்க்கவே பயன்பட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் என்றாலே ஒழுக்கம் மிகுந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

எதிரிகளும் ஏற்றுக்கொண்ட உண்மை.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு , ஜேர்மனியின் நீதிமன்றத்தில் நிகழ்ந்த
சம்பவமொன்றைக்  குறிப்பிடலாம்.

1985 ம் ஆண்டு பிற்பகுதியில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், -
விடுதலைப்புலிகளின் ஜேர்மன் கிளைப் பொறுப்பாளராகச் செயற்பட்டவர்
 கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளர்களும் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர்.

அதில் ஒரு பொறுப்பாளரைப் பார்த்த நீதிபதி, அவர் புகைப் பழக்கம் உள்ளவர்
என்பதைக் கண்டுகொண்டு, பின்வருமாறு கேட்டார்:

"உனக்கு மதுப் பழக்கம் உண்டா?"
" இல்லை " 
" உனக்குச் சிகரட் பிடிக்கும் பழக்கம் உண்டா? "
" சிலவேளைகளில்.. "  சங்கடத்துடன் நெளிந்தபடி இழுத்தார் அந்தப் பொறுப்பாளர்.
ஆனால், அவர் சங்கிலித்தொடர் ( Chain smoker)  புகைப்பிடிப்பாளர் என்பது, அவரது தடித்த உதடுகளின் கருமையிலேயே தெரிந்தது.
நிதிபதியும் விடாமல், " உனது மேலிடத்துக்கு அறிவிக்கட்டுமா? " என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
நீதிமன்றமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

அவ்வளவுக்கு, ஜெர்மானியர்களே, விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்
என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

மேலும், இவ்வளவு ஒழுக்கம் மிகுந்த ஒரு இயக்கத்தில் நீண்டகாலம் பயிற்சி பெற்ற ஒருவர்,
எவ்வளவு உடல் வலிமை மிகுந்தவராக இருக்கவேண்டும்?
ஒரு சராசரி ஆணை விடவே, பெண்புலிகள் வலிமை மிக்கவர்கள் அல்லவா?.
அப்படியிருக்க எதற்காக இவர் பாலியல் தொழில் செய்யவேண்டும்?
ஒருவேளை, 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு, உடல் வலிமை குன்றியிருந்தாலும்கூட, -

´உடல்வலிமை குறைந்தவர்களெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடலாம்`என்று சொல்லலாமா?

இன்னும், இவரைவிடவும் உடல் வலிமை குறைந்த பெண்கள்  ஈழத்தில் இல்லையா?

அத்தனை பெண்களுமே பாலியல் தொழிலையா செய்கிறார்கள்?
எனவே, இவர் கூறும் அடிப்படைக்காரணமே இங்கு தகர்ந்துபோகிறது.

இனி, அந்த மூன்றாவது தேர்வான, ´விகடனின் கற்பனை`என்பதைக் கருத்திற்கொண்டு,
நோக்கினால், -

பொதுவாகவே விகடன் குழுமம் மட்டுமல்லாது, பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளுமே
கொள்கைப்பிடிப்பில்லாமல் இயங்குபவைதாம்.
அதிலும் இந்த விகடன் குழுமத்தின் நகர்வு கொஞ்சம் வித்தியாசமானது.
தமிழ்நாட்டில் புலி ஆதரவு பலமாக இருந்த காலத்திலேயே,
´ஆனந்த விகடன்`இல் புலிகளுக்கு எதிராகவும், ´ஜூனியர் விகடன்`இல் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதி
இருசாராரிடமும் சம்பாதித்த வரலாறும் இதற்கு உள்ளது.

இதைக் கருத்திற்கொண்டுதான், ஈழப்பிரச்சினையை மையக்கருவாகக்கொண்டு வெளியான ´ஆணிவேர்`என்ற திரைப்படத்தில்
 ஒரு காட்சி வரும்..

கதாநாயகன் குண்டடிபட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது,
அங்கு வந்த தமிழக நிருபரான கதாநாயகி ஒலிவாங்கியை நீட்டுகிறாள்..
இதனால் வெகுண்டுபோன அவன், " எங்கள் இரத்தத்தையும் சதையையும் காசாக்க வந்துவிட்டீர்களா?.. போடீ.." என்று சீறுகிறான்.
அதாவது, கொள்கைப்பிடிப்போ மனிதநேயமோ அன்றி இன உணர்வோ .... ஏதுமின்றி, முழுக்க முழுக்க பணத்தையே
 குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் கீழ்த்தரமான உலகம்.

´வட்டுக்கோட்டை` - ´நவாலி` - ´புக்காரா`  இப்படி ஒருசில சொற்பதங்களை வைத்து,  இந்தப்பேட்டியை அளித்தவர் ஒரு உண்மையான ஈழப்போராளிதான் என்று காண்பிக்கமுனைந்திருக்கிறது இப்பத்திரிகை.

இவையெல்லாம் இன்று ´சனல் 4` தொலைக்காட்சியினால், உலகம் முழுவதுமே அறிந்த சொற்கள்.

இன்னும், இக்கட்டுரையாளர் தம்மையறியாமலே பல முரண்பாடுகளை இதில் வைத்திருக்கிறார்.

இதில் முக்கியமானதாக, ´ ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது ` என்று கூறும் இவர்,
அதற்கு மறுதலையாக, தாம் பெண் என்பதால் கணவர் இறந்தபின் வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாறியதாகச் சொல்கிறார்.

எத்தனையோ மனைவியை இழந்த  ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அத்தனை ஆண்களுமே பாலியல் தொழிலா செய்கிறார்கள்?

வன்னிக்குப் போய்வந்த எனது நண்பரொருவர் தாம் பட்ட அனுபவத்தை இப்படி விபரித்தார்:

ஒரு காலை முழுமையாக இழந்த ஒருவர், சிறிய குடிசையொன்றில், நான்கு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
மூத்தவளுக்கு வயது 15 இருக்கலாம். அப்படியே 12... 10... 8 என்ற வரிசையில் கடைக்குட்டிதான் ஆண் பிள்ளை.
அக்குடிசையுடனேயே ஒரு சிறு பத்தியொன்றை இறக்கி, அதில்  ´மிதிவண்டி திருத்தும் நிலையம்`ஒன்றை நடத்திவருகிறாராம்.
அந்த 5 சீவன்களுக்கும் அவ்வப்போது ஒருநேரக் கஞ்சிக்கேனும் வழியேற்படுத்துவது அந்தத்தொழில்தானாம்.
இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், அத்தனை பிள்ளைகளும் பாடசாலைக்கும் போகிறார்களாம்.

தமக்கென்றால்,சொல்லொணாத கவலையும், அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்ததாம்.
அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அப்பிள்ளைகளை அவர் மட்டுமே வளர்த்து வருவதாகச் சொன்னாராம்.

ஒருவேளை, அவரது மனைவி போரில் இறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, தாம் அவரைப்பார்த்து,
" ஏன்? உங்க மனைவி மோசம் போய்விட்டாவா?" என்று கேட்டாராம்.
சிறிதுநேரம் பதிலே சொல்லாமல் அமைதிகாத்த அவர், திடீரென முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,
" அவ மோசம் போகேல்லை.. வேசம் போட்டா" என்றாராம்.
தாம் ஏதும் புரியாமல், ´திரு திரு`வென முழிக்க, அவரே தொடர்ந்து சொன்னாராம் - தமக்கு ஒரு கால் போனதிலிருந்து
தமது மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று.

இதுபோல, அங்கே வன்னியில், அந்த மக்கள் நினைத்தே பார்த்திராத -  யாரும் கற்பனையே செய்ய முடியாத நிலைமைகள் இன்னும் ஏராளம் உண்டு.
இப்போது நான் கேட்கிறேன்: இந்த நிலையில் அந்த ´விகடனின் கற்பனைப் போராளி` இருந்தால்,ஒருவேளை பாலியல் தொழிலுடன் , போதை மருந்துக் கடத்தலும் செய்வாரோ?
மேலும், யாழ்ப்பாணத்தைக் கேவலப்படுத்தும் ஒரு முயற்சியாக, ´யாழ்ப்பாணம் வந்த கணத்திலிருந்துதான் நான் பாலியல் தொழிலாளியானேன்`என்கிறாராம்.....யாழ்ப்பாணம் என்றாலே ஏதோ சிவப்பு விளக்குப்பகுதி என்பதுபோல.
உலகிலேயே தனித்தன்மையான வாழ்க்கைமுறையினைக்கொண்ட யாழ் குடாவில், திட்டமிட்டே கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகளை ஏன் இவர் குறிப்பிடவில்லை?
பிச்சை போடவே பயந்தவர்கள், கூடப்படுக்கமட்டும் பயப்படவில்லையாம். இது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
´ எங்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்` என்று இந்தியத்தலைவர்களைப் பார்த்து அப்பெண் கேட்கிறாளாம்.
அதாவது, அந்த வியாபாரத்தைத் தமக்கு மட்டுமே தனியுடைமை ஆக்குமாறு கேட்கிறது விகடன்.

´எமது போராட்டம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது` .......

இதைச் சொல்லுமளவுக்கு இவர் என்ன உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவரா?
ஆயுதப்போராட்டம் வேண்டுமானால் மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம். அதுகூட, ´ மௌனிக்கப்பட்டுள்ளது` என்றுதான் புலித்தலைமை அறிவித்தது.
ஆனால், அரசியல் போர் தொடர்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத ஒருவர் சொன்னதாக, இக்கட்டுரையாளர் எமக்குச் சொல்வது என்பது,  அப்பட்டமான ´காதுல பூ` இல்லாமல் வேறென்ன?
இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம்:

இந்தியத்தலைவர்களை - தமிழீழத்தலைவர்களை என்று சகட்டு மேனிக்குச் சாடும் இவர்,  மறந்தும் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா காங்கிரசைச் சாடவில்லை.
சிறிலங்காவைக்கூட ´அமைச்சர்கள்`என்று பட்டும் படாமலும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிங்கள அரசு என்றோ, மகிந்த அரசு என்றோ குறிப்பிடவில்லை.
புலிகளுக்கு எதிரானதா, அன்றி ஆதரவானதா என்று மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே,
விற்பனையில் சாதனை படைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லி, சோ சாமி, சு சாமி போன்றவர்களையும் திருப்திப்படுத்தி,
´இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன்` என்று, தமிழுணர்வாளர்களையும் குளிர்வித்து,
´ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது`என்று, பெண்ணியவாதிகளையும் கட்டிப்போட்டு,

ஒரு மாயாஜாலங்காட்ட முனைந்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட விகடன்.

இதையெல்லாம் பார்த்தால், 1970 களில் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான, அமரர் சொக்கன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்குவருகிறது.

´தமிழகச் சஞ்சிகைகளின் இறக்குமதி அவசியமா? அவசியமில்லையா? ` என்ற தலைப்பில் ,யாழ்.பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில்,பலரது கருத்தும்  ´அவசியம்`என்ற வகையிலேயே அமைந்திருந்தது.
அதிலும் ஒருவர், " நாம் தமிழகமக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதனால், இறக்குமதி அவசியமே" என்றார்.
இதனால், வெகுண்டுபோன கவிஞர் சொக்கன் அவர்கள், ´கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தேவி வார இதழ்  ஆகிய 4 சஞ்சிகைகளையும் கைகளில் உயர்த்திப்பிடித்தபடியே சொன்னார் :  இந்த 4 சஞ்சிகைகளுக்குமே குறைந்தபட்சமாக 4 முதலாளிகள்தான் இருப்பார்கள்.
இந்த 4 முதலாளிகளுக்காக 35 இலட்சம் தமிழ் மக்களை வெறுப்பார்களேயானால், அந்த 4 கோடி மக்களின் ஆதரவு நமக்குத்தேவையில்லை.

இன்று தமிழன் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவும் இதுதான்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்,தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கெல்லாம்  அவ்வப்போது தகுந்த பாடம் புகட்டி,
தமிழின விடுதலையைத் தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
செய்வோமா?

     --- சிவம் அமுதசிவம்.

Thursday, September 6, 2012

தமிழருவி மணியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோள்!



ஐயா!தங்கள் பெயரின் முன்னே இருக்கும் அடைமொழிக்கு முற்றிலும் தாங்கள் தகுதியானவரே!
பேசும்போதுகூட,அந்த உச்சரிப்பு,கேட்கக்கேட்கத் திகட்டாது.

தங்கள் பேச்சுகளை இணையத்தில் தேடியெடுத்து,அடிக்கடி நான் கேட்பதுண்டு.அவ்வளவுக்கு நான் தங்களின் பரம இரசிகன்.

ஆனாலும்,அண்மையில் ´சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டது`பற்றித் தாங்கள் வெளியிட்ட கருத்து என்மனதைக் கொஞ்சம் புண்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அமைதி வழியிலேயே முப்பது ஆண்டுகள் போராடி,
ஒரு தலைமுறையே நாசமாய்ப் போனதுதான் நம் வரலாறு என்பது தாங்கள் அறியாததல்ல.
அமைதி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுகள்,துப்பாக்கிக்குண்டுகளும்,தூஷண வார்த்தைகளுமே!

நிராயுதபாணிகளாக நின்றவர்களிடம் வீரத்தைக் காட்டினார்கள் அந்த வீணர்கள்.
துரத்தித்துரத்தி வெட்டினார்கள்.
ஓடினோம்! ஓடினோம்!! ஓடிக்கொண்டேயிருந்தோம்.
அப்போதுகூட அவர்கள் துரத்துவதை நிறுத்தவில்லை. கூக்குரலிட்டோம்.யாருமே கண்டுகொள்ளவில்லை. கூப்பிடுதூரத்திலுள்ள தமிழகமே ஏனென்று கேட்கவில்லை. அழுதோம்! அழுதோம்!! அழுதுகொண்டேயிருந்தோம்.
இந்த அழுகையை நிறுத்த - கண்ணீரைத்துடைக்க ´புலியென`புறப்பட்டான் ஓரிளைஞன்.
அவன் தான் எங்கள் மேதகு தலைவன் பிரபாகரன்.
அடுத்தகணமே எமது இரகசியப் பேச்சுகளைக்கூட உலகம் உற்றுக்கேட்டது.
தங்களைப் போலவே,காந்தியாரின் கொள்கைகளில் பற்றுவைத்து,அமைதி வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அழிந்துபோன,ஈழத்தின் தந்தைசெல்வாவின் காலத்திலிருந்து,
முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன புலிகளின் ஆயுதப்போராட்டம்வரை,
இந்தச்சிங்களர்கள் தமது அரசைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அடிப்படைத் தகைமையாக எதைக் கொள்கிறார்கள்?
´எவர் அதிகமாக இனவாதத்தைக் கக்குகிறார்`என்பதைத்தானே?இவர்களைப்பொறுத்தவரை,அன்பு,கருணை,இரக்கம் என்பனவெல்லாம் நூதனசாலையில் வைக்கவேண்டியபொருட்கள்.

இதற்குமேலும் இவர்களுக்கெல்லாம் அமைதிவழியில் எதையாவது புரியவைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
மகாத்மா காந்தியே வன்முறையை முற்றாக எதிர்க்கவில்லையே!பெண்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள,விரல் நகங்களையே ஆயுதங்களாக்கி வன்முறையில் ஈடுபடலாம் என்றுதானே சொல்கிறார்?

நமது நிலைமை இதைவிட மோசமானதில்லையா?

மேலும்,காந்தியின் காலம் என்றோ காலாவதியாகிவிட்டது.
காந்தி என்றபெயர்,அவருக்கே இல்லையென்றாகிவிட்டது.

ஆயுதப்போராட்டம் என்பதைவிட,
நினைத்துப்பார்க்கமுடியாத கொடுமைகளுக்கு வித்திட்ட சர்வாதிகாரிகளுள் ஒருவரான ´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.

ஸ்ரீலங்காவைத்தான் விட்டுத்தள்ளுவோம்... இந்தியத்திருநாட்டிலேயே ´மகாத்மாகாந்தி`என்பது மாயை என்றாகிவிட்டது.
திலீபனைச் சாகவிட்டோம்;
செந்தூரனைக் கண்டுகொள்ளவேயில்லை.
இன்னும் ஆண்டுக்கணக்காக அமைதிவழியில் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின்மீதே ஆயுதவன்முறைதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

அமைதிவழியில் போராடும் நமது மக்கள் செத்து விழுந்தால், எத்தனை பிணங்களையும் தின்னக் காத்திருக்கின்றன பேய்கள்.

வெள்ளையர்கள் காந்தியாரின் அமைதிவழிக்கு மதிப்புக் கொடுத்தார்கள்;
ஆனால் அந்த அமைதிவழியைத் தங்களுடனேயே எடுத்தும் சென்றுவிட்டார்கள்.

இதனாற்றான்,இலண்டன் மாநகரில் உண்ணாவிரதமிருந்த இளைஞன் பரமேஸ்வரனை அமெரிக்காவரை அழைத்துப்போய் பேச்சுவார்த்தை நடத்தி,அவனது உயிரைக் காப்பாற்ற அவர்களால் முடிந்தது.

இன்னும்,முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிக்கொண்டிருந்த அந்த வேளையில்,தமிழகமே திரண்டுநின்று,ஒரேகுரலில்
" ஏ! ஸ்ரீலங்காவே!போரை நிறுத்து!அப்பாவி மக்களின்மீது குண்டுகளைப் போடாதே!" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியது.

,அவர்களுக்கு அது துளியும் கேட்கவில்லை. டில்லிக்கும் கேட்கவில்லை.ஏன்?தமிழக ஆட்சியாளர்களுக்கே கேட்கவில்லை.
இன்னும்,எங்களைக் ´கோமாளிகள்`என்று கேலிசெய்தார்கள்.

ஆனால்,இது மட்டும் உடனடியாகவே அனைவரது காதுகளிலும் விழுந்து,அடுத்த கணமே நம்முடன் போர்ப்பிரகடனமும் செய்துவிட்டார்கள்.
 இப்போது,நான் தங்களிடம் கேட்கும் கேள்வி: இந்தக் கல்லில் நார் உரிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?

அதாவது,அமைதிவழிப் போராட்டம் இவர்கள் விடயத்தில் பலன்தருமா?

இவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது,´கசாப்புக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதுபோலில்லையா?

எனவே,காந்தியாரின் பெயரால் இயக்கம் கண்டிருக்கும் தாங்களாவது,எனது இந்த மனக்குமுறலைப் புரிந்துகொண்டு, நியாயம் வழங்குவீர்கள் எனும் எதிர்பார்ப்புடன் இம்மடலை நிறைவுசெய்கிறேன்.

வெல்க தமிழ்!!!



Friday, May 4, 2012

 முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக்

கொலையுண்ட எமது உறவுகளுக்கான

 சிறப்புப் பதிவு.


முள்ளிவாய்க்கால்தானா முடிவாகிப்போகும் போடா! 

பாடல் இடம்பெற்றுள்ள குறுவட்டு : தாய்பிறந்த மண்

அடடா! தமிழா! தமிழா! தமிழா!
அடடா! தமிழா! தமிழா! தமிழா!

முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எத்தனை முறைதான் கடல் கொண்டது;
எத்தனை முறைதான்  இடர் தந்தது ;
அத்தனை முறையும் தமிழ் வென்றது
அடடா! வா தமிழா!
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எழுஎழு விரைவினில் தரணியில் தமிழதன்
இழிநிலை துடைத்திடுவோம் வா!
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
புயலொடு பொருதிடு பகைவரின் படையதில்
முடிவுரை எழுதிடு வாடா!

                                             - நம் - 
உறவுகள் அங்கே ஆயிரம்
மாண்டனர் அன்றோ ஆயினும் - நீ
மீண்டும் எழுந்தொரு தீயில் இறங்கிடு
நம்பிக்கை ஒன்றே ஆயுதம்
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எங்கள் மண்ணின் மடி தொட்டவன் - எமை
அங்கு நின்றபடி சுட்டவன் - ஒரு
ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி
அழிந்துபோகத் தக்கவன்.
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 
                                             ஆக்கம் : சிவம் அமுதசிவம் 

Friday, November 18, 2011

முதலாவது மாவீரர்நாள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ,
1976 ம் ஆண்டிலிருந்து, தாயக விடுதலைக்காய் தமதின்னுயிரை ஈகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகங்களையெல்லாம் , அவ்வப்போது உரியமுறையில் கௌரவித்து வந்த விடுதலைப்புலிகள், காலப்போக்கில் அதற்கென்றே ஒரு நாளைப் பிரகடனப் படுத்தினர். 
அதாவது, 1989 ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27 ம் நாள் முதன்முதலாகத் தமிழீழத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் மாவீரர்களுக்கான 
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த ’கார்த்திகை 27’ என்பது, அவ்வமைப்பின் முதற்களபலியான 
மாவீரன் செ.சத்தியநாதன் எனும் இயற்பெயரைக்கொண்ட 
லெப்.கேணல் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட தினம் எனும் குறியீட்டுடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. 
எனினும் மேலதிக ஒரு காரணமாக : தலைவர் பிரபாகரன் பிறந்தநாளான 
கார்த்திகை 26 ம் இணைக்கப்பட்டது.
1982 இல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு , படுகாயங்களுடன் குருதி சொட்டச்சொட்டத் தப்பியோடிவந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி,
தலைவரின் மடியிலேயே உயிர்துறந்த 
அந்த உன்னதப்போராளியை மறக்கமுடியாமற்றான் 
13 ஆண்டுகள் கழித்து , அவ்வமைப்பு இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியது.
உலகறிய ’மாவீரர்நாள்’ பிரகடனப்படுத்தப்பட்டது 1989 இல் என்றாலும்,
அவ்வெண்ணக்கருவானது, அவர் பலியான 
ஓராண்டு நிறைவு தினமாகிய
1983 கார்த்திகை 27 
இலேயே விடுதலைப்புலிகளிடம் தோன்றியிருந்தது. 
மிகக்குறைவான உறுப்பினர்களையே கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரத் தெருக்களின் சுவர்களையெல்லாம் அலங்கரித்த, அஞ்சலிக்கவிதைகளிற் சிலவற்றை 
இதிற்காணலாம்.


1. மீளாத் துயிலில் ஆழ்ந்தநம் தோழா!
           மீண்டு மிவண்வா! சத்தியநாதா!
     நாளா னாலும் நாமுனை மறவோம்.
            நாட்கள் சென்றால் நாமுனைத் தொடர்வோம்!
    தூளாய்ப் போகும் துட்டரின் சட்டம்!
            தூக்கி யெறிந்திடுவோம் எம திஷ்டம்!
    காளான் போலும் கட்சிக ளில்லை
           காண்போம் முடிவில் தனித் தமிழீழம்!

2.   விடைகொண்ட வீரா! வீறுடை வேங்கை
                 விண்ணிலே வாழும் சத்தியநாதா!
      குடைகின்ற தையா குமுறிடும் நெஞ்சம்!
                 கூடிடும் நாளோ ஓராண்டு காலம்!
      மடையினை வென்ற வெள்ளமா யோடும்
                மனதில்நாம் கொண்ட இலட்சியம் யாவும்
     தடையினை வென்று தாயகம் காப்போம்!
               தரணியிற் காண்போம் தனித் தமிழீழம்!

3.   விடிகின்ற வேளை வெளிவரும் அந்த
              வெள்ளியைப் போலும் விடுதலைப் போரின்
      அடித்தள மானாய் அன்பின்நம் தோழா!
              ஆவியை ஈந்தாய் சத்தியநாதா!
     கொடியவர்எதிரி இராணுவம் வசம்நீ
              கொடுத்திட வில்லை ஆயுதம் தன்னை
    கடிதினில் வந்தாய் - நம்வசம் தந்தாய்
            காலனோ டேனோ காதலிற் சென்றாய்?
                                                                 கவிதை ஆக்கம்: சிவம் அமுதசிவம்

அப்படிப் பார்த்தால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ’ மாவீரர்நாள் ‘
1983 கார்த்த்கை 27 எனவும் கொள்ளலாம்.


Wednesday, April 20, 2011

’ பாகம் - 2 ‘ யானை பார்த்ததுபோல்......

மேற்குநாடுகளில் வாழும், புலி எதிர்ப்பாளர்களில் விசித்திரமான ஓரிரு பிரிவினரைப்பற்றி பாகம் - 1 இல் பார்த்தோம்.
இந்த வகையினரில் புத்திசாலித்தனமாகப் பொருளீட்டும் மற்றொருபிரிவினர்பற்றியும் இங்கு சிறிதளவு பார்ப்போம்.
இவர்கள் மக்களிடம் பணம் வசூலிக்கப்போகும்போது, தனிப்பட்டவர்களாகப்போகாமல், ஒரு நிறுவனமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு போவார்கள்.
அதுவும், ஏற்கெனவே பிரபலமான தொண்டர்நிறுவனங்களின் பெயர்களின் சாயலிலேயே தமது நிறுவனத்தின் பெயரையும் அமைத்துவிடுவார்கள்.
உதாரணமாக, ‘ செஞ்சிலுவைச்சங்கம் ‘ என்பதிலுள்ள ‘ சிலுவை ‘ என்பதைத் தமது நிறுவனத்தின் பெயரில் சொருகிக்கொள்வார்கள்.
அல்லது, ‘ உதவும் கரங்கள் ’ ( Helping Hands ) என்பதை ‘ கரங்கள் ‘ என்றோ ’ கரம் ‘ என்றோ பயன்படுத்துவார்கள்.
இதன்மூலம், மக்களின் சந்தேகப்பார்வையிலிருந்து தப்பிக்கொள்வார்கள். இன்னும், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கில் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்சந்தித்து, மறக்காமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, அதைப்பிரபலப்படுத்தி, தாம் மேல்மட்டங்களுடனெல்லாம் தொடர்புள்ளவர்கள் என்பதுபோல மாயை காட்டுவார்கள்.
யாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இவர்களைச்சந்திக்க மறுத்தால்,
அவர்களைக் கீழ்த்தரமாகத்திட்டித் தமது வலைப்பூக்களில் செய்தி வெளியிடுவார்கள்.
இப்படிச்சேர்த்த பணத்திலேயே இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமது உறவினர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒருபகுதியைக்கொடுத்துவிட்டு , இவர்களுக்குத்தான் புதிய வாழ்க்கைதொடங்க உதவுகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.
முழுமையான வரவு - செலவுக்கணக்குகளைக்கூடக்காட்டமாட்டார்கள்.
“ சிறியதொகை தந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அவர்கள் மனவருத்தப்படுவார்கள் “ என்ற சாக்குச்சொல்லி
அரைகுறைக்கணக்குவழக்கையே வெளியிடுவார்கள்.
தட்டிக்கேட்க யாரால்முடியும்? புலியின் கதைதான் முடிந்துவிட்டதே! ... என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள் இவர்கள்!

இப்படியாகப் புலியைப்பார்த்த ‘யானைபார்த்த குருடர் ’ களில் -
முதலாவது வகையின் முதன்மூன்று பிரிவினர்தான் இவர்கள்.

இன்னும், இவர்களிடையேயும் , -
முகத்துக்கஞ்சி ...........யாடுவோர் என்ற ரகமும் இருக்கத்தான் செய்கிறது.அதாவது, புலி தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் - நிகழ்ச்சிகளை மனதார இவர்கள் தவிர்க்கவிரும்பினாலும் , அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தற்செயலாகத் தமிழீழம் கிடைத்துவிட்டால், அங்குள்ள தமது நிலபுலங்கள் வீடுகளைப் பார்க்கமுடியாமற்போய்விடுமே என்பதற்காக -
புலி ஆதரவாளர்கள் பார்க்கும்படியாக இடைக்கிடை அங்கு முகம் காட்டுவார்கள்.
அதிலும் இவர்கள் புத்திசாலித்தனமாக, புலி ஆதரவாளர்களால் நடாத்தப்பெறும் ‘மே தின ஊர்வலம் ’ போன்ற, இரண்டிற்கும் இடைப்பட்டவற்றிற்கே சமுகமளிப்பார்கள்.
இதன்மூலம், தமது துரோக வட்டத்தில் கேள்வி எழுந்தால், -

“ இவங்கடைக்கு ஆரும் போவாங்களே? நான் மேதின ஊர்வலம் எண்டபடியாத்தான் போனனான் “ என்று சொல்லித்தப்பிக்கொள்வார்கள்.

நானறிந்த இவ்வகையான ஒருவர், தனது பிள்ளைகளை, புலிவாடையே படக்கூடாது என்ற கரிசனையுடன் மிகவும் கவனமாகவே வளர்த்துவந்தார்.
ஆனால், அவரின் மூத்த மகன், கடந்த மாவீரர்தினத்திற்கு வந்திருந்தான்.
எதிர்பாரமல் என்னைச் சந்தித்தவன், தான் அங்கு வந்தமைபற்றித் தந்தையாரியம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டான்.
நானும், ‘ அப்பன் அப்படி இருந்தாலும், இவனாவது இளைஞர் அமைப்புடன் சேர்ந்தியங்குகிறானே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது - அவன் வந்தது , அங்குவரும் பெண்பிள்ளைகளைப்பார்ப்பதற்காக என்று...
இஃதெப்படியிருக்கிறது?
தமிழினத்தின் விடிவிற்காய் தம்மையே ஆகுதியாக்கிய அந்த ஒப்பற்ற மாவீரர்களுக்கான நினைவுநாள், எப்படியெப்படியெல்லாம் பயன்படுகிறது.

இப்படியானவர்கள் நமது சமுதாயத்தின் குள்ளநரிகள்.
இவர்களுடன் எதையும் மிகுந்த அவதானத்துடனேயே பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இன்னும் ஒருசில வினோதமான சனங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.
இவைகளைப்பொறுத்தவரை , ‘ இராமன் ஆண்டாலென்ன... இராவணன் ஆண்டாலென்ன....
ஒலிவாங்கியுடன் மேடை எங்கெல்லாம் கிடைக்குமோ , அங்கெல்லாம் தோன்றுவார்கள் இந்த ஈனப்பிறவிகள்.
புலிகள் களத்தில் நின்ற, கடந்த 2008வரை, துரோகிகளின் மேடை கிடைக்காமையால், வேறுவழியின்றி புலிகளுடனேயே நின்று
வீரவசனம் பேசித்திரிந்தவர்கள் -
தமிழகத்தலைவர்கள் தோன்றும் மேலைத்தேய மேடைகளிலெல்லாம் தலையைக்காட்டி, தம்மைப் பெருமிதப்படுத்திக்கொண்டவர்கள் -
2009 இலிருந்து புலிகளின் பின்னடைவைக்கண்டு மெல்லமெல்ல காணாமற்போகத்தொடங்கினர்.
அதுமட்டுமல்லாது துரோகக்குழுக்களைத் தேடிப்போகவும் தலைப்பட்டனர்.

இங்கு புலிகளின் மேடைகளில் பேசியவீர வசனங்களுக்கு முழுமாறாக , அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் , மறக்காமல் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தூற்றுவார்கள்.
இன்னும், ”தொலைந்தான் பிரபாகரன்.இனி பிரச்சினையில்லை; சும்மா சும்மா காசு காசெண்டு இங்கை வரமாட்டாங்கள்” என்று கூடிக்கதைப்பார்கள்.
இவர்களெல்லாம், புலியின் பலத்தைப் பார்க்காமல்,
மலத்தைமட்டும் பார்த்தவர்கள்.
ஒன்றிலிருந்து ஐந்துவரை அறிவுகொண்ட ஜந்துக்கள்!
அப்படித்தான் இருப்பார்கள்.
இவை மட்டுமல்ல... இன்னும் தினுசு தினுசாக எத்தனையோ ரகங்கள் உண்டு.அத்தனையையுமிங்கு அலசமுனைந்தால், இன்னும் நூறு பாகங்கள் முடிந்தாலும் இக்கட்டுரை முடியாது. எனினும், குப்பை கூளங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துவைத்திருந்தாற்றானே சமயத்தில் நாம் அவற்றைத்தவிர்த்து நடந்துகொள்ளமுடியும்?
இந்தக்காரணத்துக்காகத்தான் , இரண்டு பாகங்கள் முடியும்வரையில் இதை அலசவேண்டியதாயிற்று.
இனி, அடுத்த பாகத்தில் புலி ஆதரவாளர்களிடையே உள்ள முரண்பாடுகளையும் அதற்கான காரணங்களையும் விரிவான முறையில் ஆராய்ந்து அம்முரண்பாடுகளைக் களைவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்வோம்.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம் உறவுகளே!

அன்புடன்
சிவம் அமுதசிவம்


Thursday, April 7, 2011

யானை பார்த்ததுபோல் ‘ புலி ‘ யைப்பார்த்தவர்கள் - பாகம் 1


’ கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல ‘ மிகத்துல்லியமான பார்வையுடன் , திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழீழப்போராட்டமானது, -
‘ தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ‘ என்பதுபோல்,
கணனி கிடைத்தவன் எல்லாம் தலைவனாகி, -
எதிரிக்காக, ஒன்றிற்குமேற்பட்ட பாதைகளைத்திறந்து செங்கம்பளம்விரித்து நிற்கிறது.
தமிழீழத்துக்கான எமது போராட்டம்,
தற்காலிகமாக முடங்கியுள்ளதேதவிர,
’முடித்துவைக்கப்படவில்லை ‘ என்பதை,
மௌனிக்கிறோம் ‘
என, மிகத்தெளிவாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளபோதிலும்,
அதைக்கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல்,
‘ புலிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது ‘
என்று மனனம் செய்வதிலேயே இன்பம்காண்பவர்கள்தாம் இங்கு அதிகமாக உள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை காட்டிக்கொடுப்பு வேலைகளைமட்டுமே கனகச்சிதமாக்ச்செய்துகொண்டிருந்த பலர்,
‘ அண்ணை எப்ப சாவான் ; திண்ணை எப்ப காலியாகும் ‘ எனக்காத்திருந்ததுபோல -
இந்த இடைவெளியை நிரப்புவதில் போட்டிபோட்டுக்கொண்டு பொருளீட்டமுனைகின்றனர்.
ஆனாலும், இவர்கள் ,தமது துரோகமுகத்துக்கு , இனப்பற்று என அவர்களே சொல்லிக்கொள்ளும் ஒரு முகமூடியை அணிந்தபடியே புலம்பெயர்தேசத்துமக்களுள் வலம்வருகிறார்கள்.
அங்கு முள்வேலியிலுள் அல்லற்படும் மக்களுக்கு உதவிசெய்யப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டே பொருட்களாகவும் பணமாகவும் வசூலித்து தமது வாழ்வு வசதிகளைப்பெருக்கிக்கொள்கிறார்கள்.

உலகமே வியக்குமளவுக்கு இத்தனை அளப்பரிய தியாகங்களைச்செய்து, தமிழர்பிரச்சினைகளை உலகத்தின் கண்களுக்குத் தெரியவைத்த புலிகளைப்பற்றி இவர்களிடம்கேட்டால்,
“ இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை ; மக்களைப்பற்றித்தான் எமது கவலையெல்லாம்..... “
என்பதுபோன்ற தத்துவங்களை உதிர்த்துவிட்டு, -
புலம்பெயர்தமிழரைச்சுரண்டித் தமது வங்கிக்கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திடமே தட்டிப்பறித்து, தங்களுக்கு ஆதரவான சிங்களருக்கு வழங்கும் மகிந்தா கும்பலுக்கு , இவர்கள் எம்மாத்திரம்?
அப்படி இவர்கள் தட்டித்தவறி ஏதாவது, தமது உறவினர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் கொண்டுபோனாலும், அது முழுமையாக கொழும்பைத்தாண்டாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
செஞ்சிலுவைச்சங்கமானது, தான் கொண்டுபோன பொருட்களை, வினியோகம் செய்யும் இடத்தில்வைத்துத்தான் சிங்களக்காடையரிடம் பறிகொடுத்தது ; ஆனால், இவர்களோ தாமாகவே சிங்களரின் காலடியில்வைத்து, அதில் மிஞ்சும் ஓட்டை உடைசல்களைத்தான் அப்பால் கொண்டுபோகமுடியும். இதுதான் யதார்த்தம்.
யானை பார்த்த குருடர்கள் கதை நாமெல்லாம் சிறுவயதில் படித்ததுதான்.
ஒருவன் வாலைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு, யானை ‘ விளக்குமாறு ‘ போல் உள்ளது ‘ என்றானாம். மற்றவன், துதிக்கையைத்தடவிப் பார்த்துவிட்டு , உலக்கை போலுள்ளது என்றானாம். மற்றவர்கள் காலைத்தடவிப்பார்த்துவிட்டு ‘ தூண் ‘ என்றும், வயிற்றுப்பகுதியை ப்பார்த்துவிட்டு ‘ சுவர்’ என்றும் சொன்னார்களாம்.

இதைப்போலத்தான் இவர்களும்,----

மகிந்தாவின் பொய்ப்பிரச்சாரப்பீரங்கிகளை மட்டும் தடவிப்பார்த்துவிட்டு,
தம்மால் முடியாததை மகிந்தா செய்துமுடித்துவிட்டதாக, ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பவர்கள்.
இந்த ரகத்தைச்சேர்ந்த இவர்கள் எக்காலமும் இப்படியேதான் இருப்பார்கள். இவர்களெல்லாம் முற்றாகப் புறந்தள்ளப்படவேண்டியவர்களே!
எனினும் இந்தப் புலி எதிர்ப்பாளர்களில் இன்னோருவகையினரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது, தமக்கோ அன்றித் தமது உறவினருக்கோ போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காகப் புலியைக்குறைசொல்பவர்கள். இவர்களை ஓரளவு மன்னிக்கலாம் - இவர்களது அறியாமைக்காக....
ஈவிரக்கமேயில்லாமல் குழந்தைகளைக்கூட பொசுக்கித்தள்ளிய சிங்களக்காடையரைவிட்டு , மானங்காக்கவந்த மறவரைக் குற்றஞ்சொல்லும் இவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களே!
இந்த வகையினரை வழிக்குக்கொண்டுவருவது, தமிழுணர்வாளர்களின் சாதுரியமான அணுகுமுறையிற்றான் தங்கியுள்ளது.
மேற்சொன்ன இவ்விரண்டு பிரிவினரையும்விட, இன்னொருபிரிவினரும் உள்ளனர்.

இந்தப்பிரிவினர்பற்றி இரண்டாம்பாகத்திற்காண்போம்.

----------- சிவம் அமுதசிவம்