எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, March 12, 2020

இஞ்சி சட்னி
இந்த இஞ்சி சட்னியை வேலூர் மாவட்டம் பகுதிகளில் ஆலம் பச்சடி என்று கூறுவர். மிகுந்த சுவையுடையது , இதை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம், இட்லி , தோசை, பொங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதன் சுவையில் நமது நாவு தாண்டவம் ஆடும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி 2 1/2 இன்ச்
கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
புளி 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
பூண்டு 2 பற்கள்
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தாளிக்க
மரச்செக்கு கடலெண்ணய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
சீரகம் 1/4 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
வரமிளகாய் 1
செய்முறை
1. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் உப்பை தவிர அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.
3. பிறகு மிக்ஸியில் நன்றாக வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களையும் , புளி கரைசல், தேவையான அளவு உப்புத்தூளையும் , தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் 1 தேக்கரண்டி மரச்செக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல , கடுகு, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு , வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக வதக்கி அதை இஞ்சி சட்னியில் சேர்த்து நன்றாக கிளறவும்.

Sunday, March 1, 2020

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!
*************************************
 நீண்டகால இடைவெளிக்குப்பின், என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள். ஜேர்மனிக்கு வந்த புதிதில், என்னுடன் மட்டும்தான் நெருக்கமாக‌ப் பழகுவாள்.அடிக்கடி ஏதாவதொரு சாக்கில் வீட்டுக்கு வரவும் செய்வாள்.மிகவும் நல்லவளாகத்தான் தெரிந்தாள். ஆனால், காலப்போக்கில் அவளது நடவடிக்கைகளில் பாரிய மாறுதல் தெரியத்தொடங்கியது. வயதான ஜேர்மானியப்பெண்ணொருத்தியுடன்,பொது இடங்களில் மது அருந்தியதைக் கண்டதாகவும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.
 முதலில் நான் அதை நம்பவில்லை.ஒருமுறை அவள் எனது வீட்டுக்கு வந்திருந்தபோது, பட்டும்படாமல் அதுபற்றி அவளிடம் உசாவினேன்.
அவளோ, மிகவும் வெளிப்படையாகவே அதை ஒப்புக்கொண்டது மட்டுமன்றி,‍_
 " அதென்ன...ஆம்பிளையளெல்லாம் விரும்பின வாழ்க்கையை வாழலாம்; பொம்பிளையளெண்டாமட்டும் ஓராயிரம் கட்டுப்பாடு..இஃதென்ன சிறிலங்காவே?  ஜேர்மனி. இங்கை யாரும் விருப்பம்போல வாழலாம்"  என்று பொங்கினாள்.
இதை யான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை என்னை எதிர்த்தே பேசாதவள், அன்று பெருங்குரலெடுத்துப் பெண்ணியம் பேசினாள்.
இவள் ஜேர்மனிக்குவந்து, முழுமையாக மூன்றுமாதங்கள்கூட முடியவில்லை; ஜேர்மனியைப்பற்றி எனக்கே பாடம்நடத்த வந்துவிட்டாளே... கோபத்தைவிடவும் சிரிப்புத்தான் அதிகமாகவந்தது.
ஜேர்மனியிலும் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் உண்டு. நல்ல மனிதர்கள் உண்டு. 
நெல்மணிகளில் பதர்போல, நல்லவைகளுள் ஒருசில‌ கழிசறைகளும் கலந்திருப்பது இயல்புதானே?
சாற்றினை ஓடவிட்டு, சக்கையைப் பிடித்து வைத்துக்கொள்ளும் பன்னாடைபோல, அந்தக் கழிசறையைமட்டும் வைத்துக்கொண்டு ஜேர்மனியையே அளக்கிறாளே...
பன்னாடை பன்னாடை...  மன‌துக்குள் திட்டிக்கொண்டேன்.
இனி, இவளுடன் பேசிப் பயனில்லை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, பக்குவமாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்_ இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம் என்று.
இந்தநிலையில்தான் மீண்டும் ஆறுமாதங்கள் கடந்தபின்பு தொலைபேசியில் அழைத்தாள்.
" அங்கிள், நான் மாலினி கதைக்கிறன்.."  அவள் குரலில் தயக்கம் தெரிந்தது.
அந்தப்பெயரைக் கேட்டதும், எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. உடனடியாகவே இணைப்பைத் துண்டித்துவிடலாமா என்றும் யோசித்தேன். எனது மௌனத்தில் அவளுக்கு அது புரிந்திருக்கவேண்டும்.
அவசர அவசரமாகச் சொன்னாள்: "அங்கிள்! போனைக் கட்பண்ணீடாதேங்கோ பிளீஸ்.."
" ம்ம்ம்.. சொல்லு. என்ன விஷயம்?"
ஒருசில நொடிகள் மௌனத்தின்பின் இலேசானதொரு விம்மலுடன் தொடங்கினாள்:
" இதை என்னெண்டு உங்களுக்குச் சொல்றதெண்டுதான் யோசிக்கிறன் அங்கிள்..!"
" இஞ்ச வா பிள்ளை! எனக்கு நிறைய வேலையிருக்கு..சொல்றதைச் சுருக்கமாச் சொல்லு.என்ன விஷ்யம்?" மீண்டும் அழுத்திக் கேட்டேன்.
" பெத்த தகப்பனைப்போல, நீங்க எனக்கு எத்தின புத்திமதியெல்லாம் சொன்னீங்க.. ஆனா நா எதையுமே கேக்காம , இப்பிடியொரு பிரச்சினையில சிக்குப்பட்டுப்போனன் அங்கிள்.."  விக்கல் விம்மல்களுக்கிடையில் துண்டுதுண்டாக, இவ்வளவையும் சொல்லிமுடித்தாள்.
அதன்பிறகு அவள் சொன்னவைகள் எதுவுமே எனக்குப் புரியவில்லை.
கேவிக்கேவி அழுதுகொண்டேயிருந்தாள்.முடிவில் பெருங்குரலெடுத்தே அழத்தொட‌ங்கிவிட்டாள்.
´ஒருவேளை தண்ணி கிண்ணி போட்டிருப்பாளோ?` இப்படியான குறுக்குச்சிந்தனை என்மனதில் எழுந்தது. சினத்துடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
ஊரில்,இவளது குடும்பத்தையே நான் அறிவேன்.இவளுக்கு இன்னும் நான்கு சகோதரிகள் உண்டு. பெரிய குடும்பம்..
வறுமை காரணமாக, 15 வயதுச் சிறுமியான இவளை,  18 வயதான போலிக்கடவுச்சீட்டில் ஜேர்மனிக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள் இவளது பெற்றோர்.
இங்கு அனைவருக்குமே அவள் 18 வயதுப் பருவக்குமரிதான். ஆனால்,நான் அவளது குடும்பத்தையே அறிந்தவன் அல்லவா?
எனினும், எனக்கு இது தெரிந்ததாக, அவள் உட்பட யாரிடமும் நான் காட்டிக்கொண்டதில்லை. ஏதாவதொரு காரணத்திற்காக, அவள் நாடுகடத்தப்பட்டால்,என்மீது பழி விழுந்துவிடும் என்பதால், அதில் மிகவும் கவனமாகவே இருந்தேன்.
மீண்டும் தொலைபேசி அலறியது. அவளாகத்தான் இருக்கும் எனும் நினைப்பில்,அதை அப்படியே அலறவிட்டேன்.
´இவள் என்னை ஒரு வழிபண்ணாமல் விடமாட்டாள் போல இருக்கே..எனக்குத் துளியும் தேவையில்லாத பிரச்சினை இது. என்னைக் கேட்டா ஒவ்வொன்றும் இவள் செய்தாள்?` 
வெறுப்புடன் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
திடீரென்று மின்னலாக ஒன்று என் புத்தியில் உறைத்தது:
´ஒருவேளை, நாடுகடத்தும் செய்தி கிடைத்திருக்குமோ?அதனால்தான் இப்படி அழுகிறாளாக்கும்.
அப்படி, இவள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் குடும்பமே தற்கொலை செய்வது மட்டும் நிச்சயம்.
சரி.. எதற்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோமே` என்ற முடிவுடன், தொலைபேசியை எடுத்தேன்.
மறுமுனையிலிருந்து ஒரு ஜெர்மானிய‌ப்பெண்ணின் குரல் கேட்டது.
`அடச்சீ! இவளா! அந்தப் பன்னாடைக்காக, கூட இருக்கிற‌ பன்னாடை வருகுதுபோல‌ வக்காலத்துக்கு.` அருவருப்புடன் நெளிந்தேன்.
ஆனால், வந்தது அந்தப் பன்னாடை அல்ல!
மாறாக, இந்த நகரத்திலேயே புகழ்பெற்ற சட்டத்தரணியான இங்க்ரிட்  மாயா என்ற இளம்பெண்.
இங்க்ரிட் மாயாவைப்பற்றிச் சுருக்கமாகச் சொன்னால்,_
முப்பதே வயதான, வனப்புமிக்க ஜெர்மானிய இளமங்கை.
தமிழர்தம் வாழ்வியலின் இரசிகை.இயற்கையின் நிரந்தரக் காதலி.
இந்த இயற்கையின்மீது கொண்ட காதலினாலேயே,கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்றவள்.
அதாவது, அவள் கணவனுடன் குடியிருந்த வீட்டின்முன், மரமொன்றை நடுவதற்காக, நகர நிர்வாகம் முயன்றபோது, அதை,கணவன் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட பிணக்கு, மணமுறிவுவரை போய்விட்டது.
தொலைபேசியில் என்னை அழைத்த இங்க்ரிட்,முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்றும், தனது வீட்டுக்கு வரமுடியுமா என்றும் கேட்டாள்.
´என்னவாயிருக்கும்?` என்ற குழப்பத்துடன், அடுத்த பத்தே நிமிடங்களில் அங்கு நின்றேன்.
என்னை வரவேற்று அமரவைத்தவள் முகத்தில் சற்றே இறுக்கம் தெரிந்தது.
எடுத்த எடுப்பிலேயே "மாலினியைப்பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்: .
அவள் கேட்ட தோரணையில், ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது
எனக்குப் புரிந்துவிட்டது.
நீண்டகாலத்தின்பின் மாலினி தொலைபேசியில் அழைத்ததையும், ஏதோ சிக்கல் என்று மட்டும் சொல்லிவிட்டு அழுதுகொண்டிருந்ததையும் சொன்னேன்.
"  அவள் கர்ப்பமாக இருக்கிறாள்; அதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றத்தில்தான் அழுதிருக்கிறாள்போலும்."
´என்னடா இது! இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாள்...`  அதிர்ச்சியில் உறைந்தேன்.
அந்த ஏழைக்குடும்பத்தின் நிலைதான் என்கண்முன்னே நிழலாடியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னரே, அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டாள் இங்க்ரிட்.
" அதற்குக் காரணம் யார் தெரியுமா? குணாதான்"
அதிர்ந்து போயிருந்த என்னை,இது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குணா என்று இவள் குறிப்பிடுவது,மணவிலக்குப் பெற்றபின், இவளுடன் ´ஒன்றாக வாழ்தல்`  ( Living together)  எனும் முறையில், சேர்ந்துவாழும் ஒரு தமிழ் இளைஞன்.
குணாவின்மீது எனக்குக் கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
´அட‌ நாயே! உனக்குத்தான் வெள்ளைப்பணியாரம் கிடைச்சுட்டுதே.. அதுக்குப்பிறகும் ஏண்டா அந்த ஏழைக்குடும்பத்தைச் சீரழிச்சே..?` கொச்சையாகவே மனதுக்குள் திட்டினேன்.
இங்க்ரிட் தொடர்ந்தாள்: " மாலினிக்கு நான் உதவிசெய்யலாம் என்று நினைக்கிறேன். சட்டப்படி இதைக் கையாண்டு, குணாவுக்கே அவளைத் திருமணம் செய்துவைக்கவேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?"  என்றபடி என்முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
தலையைக்குனிந்தபடி நெற்றியைப் பிசைந்துகொண்டே நான் பலத்த யோசனையில் ஆழ்ந்தேன்.
சட்டப்படியான நடவடிக்கை என்றால்,இருவருக்குமே கொழும்பிலிருந்து ´திருமணமாகாதவர்கள்` எனும் சான்றிதழ் பெற‌வேண்டும். அப்போது, மாலினியின் வயது தெரியவருமே..
 இனியும் இதை மறைப்பது நல்லதல்ல... என்மனதினுள் எழுந்த போராட்டத்துக்கு, நானே தீர்வையும் கண்டுபிடித்தேன்.
" என்ன கடுமையான யோசனை? இதில் உனக்கொன்றும் பிரச்சினை வராது.மொழிப்பிரச்சினைக்காகத்தான் உன்னைக்கூப்பிட்டேன். நான் சொல்கிறதை, அவளுக்குப் புரியவைத்துவிட்டால் போதும். பாவம். அவள் சின்னப்பெண்தானே...
" சின்னப்பெண் அல்ல! அவள் சிறுமி. அதைத்தான் சொல்லலாமா விடலாமா என்று யோசிக்கிறேன்" என்னையுமறியாமல் கக்கிவிட்டேன்.
" உண்மையாகவா?"  ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. இப்போது, அவள் கடுமையான யோசனையில் ஆழ்ந்தாள்.
 ஓரிரு நிமிடங்கள் அங்கு நிலவிய அமைதியை, அவளே குலைத்துக்கொண்டு பேசத்தொடங்கினாள்.
" சரி.. இப்போதைக்கு, ஜேர்மனியைப் பொறுத்தவரை அவளது வயது 18 ஆகவே இருக்கட்டும். ஆனால், குணா இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்.  இன்னும் மூன்று ஆண்டுகளின்பின், முறையாக இருவருக்கும் திருமணம் செய்துவைப்போம். அதுவரை, மாலினி எனது அம்மா வீட்டில் இருக்கட்டும். அம்மா அவளை நன்கு கவனித்துக்கொள்வாள்.என்ன சொல்கிறாய்?"  என்றவாறு என்முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.
அவளைப் பெருமையுடன் பார்த்தேன்.
இரண்டு பன்னாடைகளுக்கு மத்தியில், ஒரு பாலுண் குருகு இவள்!
எனது சம்மதத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வீடுதிரும்பினேன்.

Tuesday, February 18, 2020

போர்க்குற்றமா?இனப்படுகொலையா?


#1958
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1974
தமிழாராய்ச்சி மாநாடு
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1977
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1983
கறுப்பு ஜூலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1984
சுன்னாகம் சந்தை
ஒதியமலை
செட்டிக்குளம்
மன்னார்
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1985
வட்டக்கண்டல்
குமுதினிப்படகு
வல்வெட்டித்துறை
தம்பட்டை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1986
கிளிவெட்டி
உடும்பன்குளம்
அக்கரைப்பற்று
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1987
இறால்பண்ணை
கொக்கட்டிச்சோலை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1990
கல்முனை
திராய்க்கேணி
வீரமுனை
கிழக்கு பல்கலைக்கழகம்
வந்தாறுமூலைப்பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
சத்துருக்கொண்டான்
சாவகச்சேரி சந்தை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1991
கொண்டச்சி
ஏறாவூர்
இருதயபுரம்
நாயன்மார் திடல்
கொக்கட்டிச்சோலை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1992
பொலன்னறுவை
மயிலந்தனை
பாலியாவெட்டை
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1993
கிளாலி
வண்ணாத்தி ஆறு
கல்வியங்காடு
யாழ்ப்பாணம் கடல்நீரேரி
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
#1995
புல்மோட்டை
நவாலி தேவாலயம்
நாகர்கோயில் பாடசாலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1996
செம்மணி
குமாரபுரம்
கிளிவெட்டி
திருகோணமலை
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#1998
தம்பலகாமம்
புதுக்குடியிருப்பு
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2000
பள்ளிக்குடா
சிலாவத்துறை
கொழும்புத்துறை
மிருசுவில்
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2006
திருகோணமலை
அல்லைப்பிட்டி
பேசாலை
மூதூர்
செஞ்சோலை
வாகரை
தாண்டிக்குளம்
போர்க்குற்றமா?இனப்படுகொலையா?
#2007
படகுத்துறை
இலுப்பக்கடவை
#2009
தர்மபுரம் வைத்தியசாலை
வல்லிபுனம் வைத்தியசாலை
சுதந்திரபுரம்
உடையார்கட்டு மருத்துவமனை
புதுக்குடியிருப்பு மருத்துவமனை
பொன்னம்பலம் மருத்துவமனை
புதுமாத்தளன்
வலையன்மடம்
முள்ளிவாய்க்கால்
போர்க்குற்றமா? இனப்படுகொலையா?
இனப்படுகொலை என்று சொல்ல
இன்னுமா வேண்டும் ஆதாரம்?
உலகம் எங்களை மறக்கச்சொல்கிறது!
மன்னிக்கவும் சொல்கிறது!!!
எதை மறப்பது?
எதை மன்னிப்பது????

Friday, May 13, 2016


இந்தநாள் கொடியநாள்
              எங்களின் துயரநாள்

இந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்
சிங்களம் எங்களின் சொந்தமண் தன்னிலே
எங்களைப் படுகொலை செய்தநாள்!
             - தீயில்நாம் வெந்தநாள்!
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
       - நீதியைத்தேடியே மேலைநாடெங்கிலும்
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
விலையிலா உயிர்களை
கொலைவெறிச் சிங்களம்
                   - கொன்றநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!
தள்ளிநின் றுலகமே தமிழனின் தலைவிதி
     தன்னையே நிர்ணயம் செய்தநாள்!
கொள்ளிவாய்ப்பேயுன் கோடரிக்காம்புகள்
        கூடியே ரத்தம்கு டித்தநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!

இந்தநாள் மீண்டும் வந்ததே இன்று –
இன்றுடன் ஏழு ஆண்டுகள் கண்டு!
இன்னமும் இங்கு கூடியே நின்று
பெட்டைப் புலம்பலின் பேதமை கொண்டு
நெட்டை மரங்களின் நீர்மையில் நின்று
வாளா விருப்பது முறையோ? முறையோ?
என்னுயிர்த் தோழா! எழுந்துநீ வாடா -
எதிரியின் சதிகளின் வலைகளை வென்று!
பெற்றவள் கதறி அழுகிறாள் அங்கே!
பேடிகள் போலநாம் வாழ்கிறோம் இங்கே!
ஆடியோ கருமை ; ஆவணி அமளி
ஐப்பசி, கார்த்திகை அதனிலும் கூட
சத்திய நாதனின் சாவினைக் கண்டோம்!
ஆண்டுகள் முழுதும் அத்தனை பொழுதும்
மாண்டவர் நினைவிலே மாரடிக் கின்றோம்.
எத்தனை காலம்தான் இப்படி வாழ்வோம்?
செத்தவர்க் காகநாம் என்னதான் செய்தோம்?
வெறுமனே கூடி தீபங்கள் ஏற்றி
ஏற்றிய தீபம் அணையுமுன் கலைவோம்!
வேற்றின மாந்தர் வீடுகள் தனிலும்
ஏறுதுதானே இத்தகை தீபம்?
அதுவெறும் தீபம். -  நாமிவண் ஏற்றும்
தீபமோ எங்கள் உணர்வினைச் சாற்றும்
உயிரில் தீமூட்டும் உறுதியைக் காட்டும்.
வேரடி மண்ணின் விறலினைக் கூட்டும்.
விடியலை நோக்கி விரலினை நீட்டும்.
ஏற்றுவோம் இங்கே இம்முறை மட்டும்!
மறுமுறை ஏறும் நம்தமிழ் மண்ணில்!!!
                                                    ஆக்கம்
                                               ---சிவம் அமுதசிவம்

Saturday, October 5, 2013

 ****-__ விகனின் விகடம்-__****

பொதுவாகவே தமிழ்நாட்டின் சஞ்சிகைகள், தினசரிச் செய்தி நிறுவனங்களெல்லாம், -
தமக்குள் தாமே இரண்டாகப் பிரிந்து, ஒன்று அரசுக்கு ஆதரவாகவும், மற்றையது எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் எழுதும் போக்குடையவை.  
( விகடன் - ஜூனியர் விகடன்)
அவர்களின் குறிக்கோள்: இரு பக்கத்திலும் தாமே முன்னணிவகிக்கவேண்டும்....
தாம்மட்டுமே சம்பாதிக்கவேண்டும்  என்பதே!
அந்தவகையில், விகடன் சஞ்சிகையானது , அண்மையில் புலிப்பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டு, அதன்மூலமே நன்றாகச் சம்பாதித்தமை யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பிரபல எழுத்தாளரான யமுனா ராஜேந்திரனை விலைக்கு வாங்கித் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது!
நடுநிலையாக எழுதியிருக்கிறாராம்...
இவர்களே அதற்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
இப்படித்தீர்ப்பு வழங்குமளவுக்கு, விகடனுக்கோ அன்றி இந்த யமுனாவுக்கோ, -
புலிகளின்மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணிபற்றி எதுவுமே தெரியாது.
இவர் புலிகளில் சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்!:

##சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு.##

சகோதரப்படுகொலை என்று, சகட்டுமேனிக்கு,  கருணாநிதி பாணியில் குற்றஞ்சாட்டும் இவர்,-
உண்மையிலேயே ´நடுநிலையாளராக இருந்தால், -
 அதன் பின்னணிபற்றியும் ஆராய்ந்திருக்கவேண்டும்.

*** ஆதிக்கவெறிபிடித்த இந்தியத் தலைமைகள், மிகவும் திட்டமிட்டமுறையில், பல கோடிகளைச் செலவுசெய்து, தமிழீழத்தில் பல போராளிக்குழுக்களை உருவாக்கியமை....
அந்தக் குழுக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கி வளர்த்துவிட்டமை....***

என்று இவைகளையெல்லாம் புறந்தள்ளி, வெறுமனே பார்ப்பனரின் குரலாகவே ஒலித்திருக்கிறார் இந்த யமுனா ராஜேந்திரன்!

2. ராசீவ் கொலை என்று பார்த்தால், -
சூ சாமி சந்திராசாமி என்று, இதில் சம்பந்தப்படிருக்கும் பல ஆசாமிகள் இன்னமும் விசாரிக்கப்படாத நிலையிலும்,-
இறுதித்தீர்ப்பே இன்னும் வராத நிலையிலும், இவ்வாறு புலிகளின்மீதே பழியைப்போடுபவருக்குப் பெயர்தான் நடுநிலையாளரோ?
3. யாழ். மண்ணைவிட்டு முசுலிம்களை வெளியேற்றியமை என்பது தவறுதான் எனக்கொண்டாலும், -
அந்தக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாததொன்றாகவே அஃதிருந்தது!
யாழ்ப்பாணத்தில் வசித்த முசுலிம்கள், போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் செய்யாமலிருந்தது மட்டுமல்லாமல், -
அரச படைகளுக்காக உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். இலுள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றிலிருந்து, பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, -
யாழ் மக்களுக்கும் முசுலிம்களுக்குமிடையிலான முறுகல்நிலை அதிகரித்தது.
பெரும் மோதல் உருவாகி, அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அன்று அப்படியானதொரு முடிவைப் புலிகள் எடுத்தனர்!
அதாவது, ஒரு நாடு எவ்வாறு அவசரகால நடவடிக்கை எடுக்குமோ, -
அதேபோன்றதொரு நடவடிக்கைதான் அது!
இன்னும் சொல்லப்போனால், -
´இந்திய குடிமக்களைத் திருப்திப்படுத்த`என்று நியாயம் கற்பித்து , எவ்வாறு கசாப் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதோ, -
அதுபோல...
ஒருதலையாகவே சிந்தித்தவரெல்லாம் நடுநிலையாளர் என்று, போக்கிரி வியாபாரிகள் பட்டம் கொடுக்கிறார்கள்!
இதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது?


Tuesday, November 6, 2012

விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


முந்நாள் விடுதலைப்புலிப் போராளி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்,
தனது வயிற்றுப் பசி தீர்க்க,பாலியல் தொழில் செய்து  உயிர் வாழ்வதாக,
´விகடன்` குழுமப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை பல வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஏற்கெனவே,பல அறிஞர்கள் இந்த விகடனின் முகத்திரையைக்
கிழி கிழியென்று கிழித்தேவிட்டார்கள்!
எனினும், எனது மனதிற் தோன்றும் கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இதை வெறுமனே ஒரே கோணத்தில் பார்க்காமல் வெவ்வேறு வகைகளில்  நோக்கவேண்டியுள்ளது.

உண்மையில், அப்படியொரு பெண் இருந்து, அவரே இப்பேட்டியை அளித்திருந்தால்,
1.இவர் சொல்வது பொய்..
2.இயக்கத்துக்கும் உண்மையில்லாமல், தமது குடும்பத்துக்கும் உண்மையில்லாமல்
 அவ்வளவு காலமும் ஒரு போராளியாக நடித்திருக்கிறார்.

அல்லது,
3.  இந்த விகடன் குழுமமே, தனது வியாபாரத்தில் ஏற்பட்ட தற்காலிகமான தொய்வைச் சரிசெய்வதற்காக
இப்படியொரு கற்பனைக்கதையை உருவாக்கியிருக்கிறது.

இம்மூன்று தேர்வுகளிலுமுள்ள முதலிரண்டு நேர்மறையான கருத்துகளைப்பற்றி முதலில் ஆராய்வோம்.

இந்தப்பேட்டி அளித்ததன் மூலம் இப்பெண் யாருக்கு என்ன நன்மை செய்ய முயன்றிருக்கிறார் என்று ஆராய்ந்தால், -
யாருக்கும் எதுவுமில்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.

தமது வயிற்றுப்பசி தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளியானதாகக்கூறும் இவர்
 வெறுமனே,பத்திரிகைக்காரரின் பசி தீர்க்கவே பயன்பட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் என்றாலே ஒழுக்கம் மிகுந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

எதிரிகளும் ஏற்றுக்கொண்ட உண்மை.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு , ஜேர்மனியின் நீதிமன்றத்தில் நிகழ்ந்த
சம்பவமொன்றைக்  குறிப்பிடலாம்.

1985 ம் ஆண்டு பிற்பகுதியில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், -
விடுதலைப்புலிகளின் ஜேர்மன் கிளைப் பொறுப்பாளராகச் செயற்பட்டவர்
 கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளர்களும் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர்.

அதில் ஒரு பொறுப்பாளரைப் பார்த்த நீதிபதி, அவர் புகைப் பழக்கம் உள்ளவர்
என்பதைக் கண்டுகொண்டு, பின்வருமாறு கேட்டார்:

"உனக்கு மதுப் பழக்கம் உண்டா?"
" இல்லை " 
" உனக்குச் சிகரட் பிடிக்கும் பழக்கம் உண்டா? "
" சிலவேளைகளில்.. "  சங்கடத்துடன் நெளிந்தபடி இழுத்தார் அந்தப் பொறுப்பாளர்.
ஆனால், அவர் சங்கிலித்தொடர் ( Chain smoker)  புகைப்பிடிப்பாளர் என்பது, அவரது தடித்த உதடுகளின் கருமையிலேயே தெரிந்தது.
நிதிபதியும் விடாமல், " உனது மேலிடத்துக்கு அறிவிக்கட்டுமா? " என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
நீதிமன்றமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

அவ்வளவுக்கு, ஜெர்மானியர்களே, விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்
என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

மேலும், இவ்வளவு ஒழுக்கம் மிகுந்த ஒரு இயக்கத்தில் நீண்டகாலம் பயிற்சி பெற்ற ஒருவர்,
எவ்வளவு உடல் வலிமை மிகுந்தவராக இருக்கவேண்டும்?
ஒரு சராசரி ஆணை விடவே, பெண்புலிகள் வலிமை மிக்கவர்கள் அல்லவா?.
அப்படியிருக்க எதற்காக இவர் பாலியல் தொழில் செய்யவேண்டும்?
ஒருவேளை, 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு, உடல் வலிமை குன்றியிருந்தாலும்கூட, -

´உடல்வலிமை குறைந்தவர்களெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடலாம்`என்று சொல்லலாமா?

இன்னும், இவரைவிடவும் உடல் வலிமை குறைந்த பெண்கள்  ஈழத்தில் இல்லையா?

அத்தனை பெண்களுமே பாலியல் தொழிலையா செய்கிறார்கள்?
எனவே, இவர் கூறும் அடிப்படைக்காரணமே இங்கு தகர்ந்துபோகிறது.

இனி, அந்த மூன்றாவது தேர்வான, ´விகடனின் கற்பனை`என்பதைக் கருத்திற்கொண்டு,
நோக்கினால், -

பொதுவாகவே விகடன் குழுமம் மட்டுமல்லாது, பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளுமே
கொள்கைப்பிடிப்பில்லாமல் இயங்குபவைதாம்.
அதிலும் இந்த விகடன் குழுமத்தின் நகர்வு கொஞ்சம் வித்தியாசமானது.
தமிழ்நாட்டில் புலி ஆதரவு பலமாக இருந்த காலத்திலேயே,
´ஆனந்த விகடன்`இல் புலிகளுக்கு எதிராகவும், ´ஜூனியர் விகடன்`இல் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதி
இருசாராரிடமும் சம்பாதித்த வரலாறும் இதற்கு உள்ளது.

இதைக் கருத்திற்கொண்டுதான், ஈழப்பிரச்சினையை மையக்கருவாகக்கொண்டு வெளியான ´ஆணிவேர்`என்ற திரைப்படத்தில்
 ஒரு காட்சி வரும்..

கதாநாயகன் குண்டடிபட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது,
அங்கு வந்த தமிழக நிருபரான கதாநாயகி ஒலிவாங்கியை நீட்டுகிறாள்..
இதனால் வெகுண்டுபோன அவன், " எங்கள் இரத்தத்தையும் சதையையும் காசாக்க வந்துவிட்டீர்களா?.. போடீ.." என்று சீறுகிறான்.
அதாவது, கொள்கைப்பிடிப்போ மனிதநேயமோ அன்றி இன உணர்வோ .... ஏதுமின்றி, முழுக்க முழுக்க பணத்தையே
 குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் கீழ்த்தரமான உலகம்.

´வட்டுக்கோட்டை` - ´நவாலி` - ´புக்காரா`  இப்படி ஒருசில சொற்பதங்களை வைத்து,  இந்தப்பேட்டியை அளித்தவர் ஒரு உண்மையான ஈழப்போராளிதான் என்று காண்பிக்கமுனைந்திருக்கிறது இப்பத்திரிகை.

இவையெல்லாம் இன்று ´சனல் 4` தொலைக்காட்சியினால், உலகம் முழுவதுமே அறிந்த சொற்கள்.

இன்னும், இக்கட்டுரையாளர் தம்மையறியாமலே பல முரண்பாடுகளை இதில் வைத்திருக்கிறார்.

இதில் முக்கியமானதாக, ´ ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது ` என்று கூறும் இவர்,
அதற்கு மறுதலையாக, தாம் பெண் என்பதால் கணவர் இறந்தபின் வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாறியதாகச் சொல்கிறார்.

எத்தனையோ மனைவியை இழந்த  ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அத்தனை ஆண்களுமே பாலியல் தொழிலா செய்கிறார்கள்?

வன்னிக்குப் போய்வந்த எனது நண்பரொருவர் தாம் பட்ட அனுபவத்தை இப்படி விபரித்தார்:

ஒரு காலை முழுமையாக இழந்த ஒருவர், சிறிய குடிசையொன்றில், நான்கு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
மூத்தவளுக்கு வயது 15 இருக்கலாம். அப்படியே 12... 10... 8 என்ற வரிசையில் கடைக்குட்டிதான் ஆண் பிள்ளை.
அக்குடிசையுடனேயே ஒரு சிறு பத்தியொன்றை இறக்கி, அதில்  ´மிதிவண்டி திருத்தும் நிலையம்`ஒன்றை நடத்திவருகிறாராம்.
அந்த 5 சீவன்களுக்கும் அவ்வப்போது ஒருநேரக் கஞ்சிக்கேனும் வழியேற்படுத்துவது அந்தத்தொழில்தானாம்.
இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், அத்தனை பிள்ளைகளும் பாடசாலைக்கும் போகிறார்களாம்.

தமக்கென்றால்,சொல்லொணாத கவலையும், அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்ததாம்.
அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அப்பிள்ளைகளை அவர் மட்டுமே வளர்த்து வருவதாகச் சொன்னாராம்.

ஒருவேளை, அவரது மனைவி போரில் இறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, தாம் அவரைப்பார்த்து,
" ஏன்? உங்க மனைவி மோசம் போய்விட்டாவா?" என்று கேட்டாராம்.
சிறிதுநேரம் பதிலே சொல்லாமல் அமைதிகாத்த அவர், திடீரென முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,
" அவ மோசம் போகேல்லை.. வேசம் போட்டா" என்றாராம்.
தாம் ஏதும் புரியாமல், ´திரு திரு`வென முழிக்க, அவரே தொடர்ந்து சொன்னாராம் - தமக்கு ஒரு கால் போனதிலிருந்து
தமது மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று.

இதுபோல, அங்கே வன்னியில், அந்த மக்கள் நினைத்தே பார்த்திராத -  யாரும் கற்பனையே செய்ய முடியாத நிலைமைகள் இன்னும் ஏராளம் உண்டு.
இப்போது நான் கேட்கிறேன்: இந்த நிலையில் அந்த ´விகடனின் கற்பனைப் போராளி` இருந்தால்,ஒருவேளை பாலியல் தொழிலுடன் , போதை மருந்துக் கடத்தலும் செய்வாரோ?
மேலும், யாழ்ப்பாணத்தைக் கேவலப்படுத்தும் ஒரு முயற்சியாக, ´யாழ்ப்பாணம் வந்த கணத்திலிருந்துதான் நான் பாலியல் தொழிலாளியானேன்`என்கிறாராம்.....யாழ்ப்பாணம் என்றாலே ஏதோ சிவப்பு விளக்குப்பகுதி என்பதுபோல.
உலகிலேயே தனித்தன்மையான வாழ்க்கைமுறையினைக்கொண்ட யாழ் குடாவில், திட்டமிட்டே கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகளை ஏன் இவர் குறிப்பிடவில்லை?
பிச்சை போடவே பயந்தவர்கள், கூடப்படுக்கமட்டும் பயப்படவில்லையாம். இது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
´ எங்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்` என்று இந்தியத்தலைவர்களைப் பார்த்து அப்பெண் கேட்கிறாளாம்.
அதாவது, அந்த வியாபாரத்தைத் தமக்கு மட்டுமே தனியுடைமை ஆக்குமாறு கேட்கிறது விகடன்.

´எமது போராட்டம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது` .......

இதைச் சொல்லுமளவுக்கு இவர் என்ன உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவரா?
ஆயுதப்போராட்டம் வேண்டுமானால் மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம். அதுகூட, ´ மௌனிக்கப்பட்டுள்ளது` என்றுதான் புலித்தலைமை அறிவித்தது.
ஆனால், அரசியல் போர் தொடர்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத ஒருவர் சொன்னதாக, இக்கட்டுரையாளர் எமக்குச் சொல்வது என்பது,  அப்பட்டமான ´காதுல பூ` இல்லாமல் வேறென்ன?
இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம்:

இந்தியத்தலைவர்களை - தமிழீழத்தலைவர்களை என்று சகட்டு மேனிக்குச் சாடும் இவர்,  மறந்தும் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா காங்கிரசைச் சாடவில்லை.
சிறிலங்காவைக்கூட ´அமைச்சர்கள்`என்று பட்டும் படாமலும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிங்கள அரசு என்றோ, மகிந்த அரசு என்றோ குறிப்பிடவில்லை.
புலிகளுக்கு எதிரானதா, அன்றி ஆதரவானதா என்று மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே,
விற்பனையில் சாதனை படைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லி, சோ சாமி, சு சாமி போன்றவர்களையும் திருப்திப்படுத்தி,
´இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன்` என்று, தமிழுணர்வாளர்களையும் குளிர்வித்து,
´ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது`என்று, பெண்ணியவாதிகளையும் கட்டிப்போட்டு,

ஒரு மாயாஜாலங்காட்ட முனைந்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட விகடன்.

இதையெல்லாம் பார்த்தால், 1970 களில் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான, அமரர் சொக்கன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்குவருகிறது.

´தமிழகச் சஞ்சிகைகளின் இறக்குமதி அவசியமா? அவசியமில்லையா? ` என்ற தலைப்பில் ,யாழ்.பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில்,பலரது கருத்தும்  ´அவசியம்`என்ற வகையிலேயே அமைந்திருந்தது.
அதிலும் ஒருவர், " நாம் தமிழகமக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதனால், இறக்குமதி அவசியமே" என்றார்.
இதனால், வெகுண்டுபோன கவிஞர் சொக்கன் அவர்கள், ´கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தேவி வார இதழ்  ஆகிய 4 சஞ்சிகைகளையும் கைகளில் உயர்த்திப்பிடித்தபடியே சொன்னார் :  இந்த 4 சஞ்சிகைகளுக்குமே குறைந்தபட்சமாக 4 முதலாளிகள்தான் இருப்பார்கள்.
இந்த 4 முதலாளிகளுக்காக 35 இலட்சம் தமிழ் மக்களை வெறுப்பார்களேயானால், அந்த 4 கோடி மக்களின் ஆதரவு நமக்குத்தேவையில்லை.

இன்று தமிழன் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவும் இதுதான்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்,தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கெல்லாம்  அவ்வப்போது தகுந்த பாடம் புகட்டி,
தமிழின விடுதலையைத் தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
செய்வோமா?

     --- சிவம் அமுதசிவம்.

Thursday, September 6, 2012

தமிழருவி மணியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோள்!



ஐயா!தங்கள் பெயரின் முன்னே இருக்கும் அடைமொழிக்கு முற்றிலும் தாங்கள் தகுதியானவரே!
பேசும்போதுகூட,அந்த உச்சரிப்பு,கேட்கக்கேட்கத் திகட்டாது.

தங்கள் பேச்சுகளை இணையத்தில் தேடியெடுத்து,அடிக்கடி நான் கேட்பதுண்டு.அவ்வளவுக்கு நான் தங்களின் பரம இரசிகன்.

ஆனாலும்,அண்மையில் ´சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டது`பற்றித் தாங்கள் வெளியிட்ட கருத்து என்மனதைக் கொஞ்சம் புண்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அமைதி வழியிலேயே முப்பது ஆண்டுகள் போராடி,
ஒரு தலைமுறையே நாசமாய்ப் போனதுதான் நம் வரலாறு என்பது தாங்கள் அறியாததல்ல.
அமைதி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுகள்,துப்பாக்கிக்குண்டுகளும்,தூஷண வார்த்தைகளுமே!

நிராயுதபாணிகளாக நின்றவர்களிடம் வீரத்தைக் காட்டினார்கள் அந்த வீணர்கள்.
துரத்தித்துரத்தி வெட்டினார்கள்.
ஓடினோம்! ஓடினோம்!! ஓடிக்கொண்டேயிருந்தோம்.
அப்போதுகூட அவர்கள் துரத்துவதை நிறுத்தவில்லை. கூக்குரலிட்டோம்.யாருமே கண்டுகொள்ளவில்லை. கூப்பிடுதூரத்திலுள்ள தமிழகமே ஏனென்று கேட்கவில்லை. அழுதோம்! அழுதோம்!! அழுதுகொண்டேயிருந்தோம்.
இந்த அழுகையை நிறுத்த - கண்ணீரைத்துடைக்க ´புலியென`புறப்பட்டான் ஓரிளைஞன்.
அவன் தான் எங்கள் மேதகு தலைவன் பிரபாகரன்.
அடுத்தகணமே எமது இரகசியப் பேச்சுகளைக்கூட உலகம் உற்றுக்கேட்டது.
தங்களைப் போலவே,காந்தியாரின் கொள்கைகளில் பற்றுவைத்து,அமைதி வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அழிந்துபோன,ஈழத்தின் தந்தைசெல்வாவின் காலத்திலிருந்து,
முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன புலிகளின் ஆயுதப்போராட்டம்வரை,
இந்தச்சிங்களர்கள் தமது அரசைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அடிப்படைத் தகைமையாக எதைக் கொள்கிறார்கள்?
´எவர் அதிகமாக இனவாதத்தைக் கக்குகிறார்`என்பதைத்தானே?இவர்களைப்பொறுத்தவரை,அன்பு,கருணை,இரக்கம் என்பனவெல்லாம் நூதனசாலையில் வைக்கவேண்டியபொருட்கள்.

இதற்குமேலும் இவர்களுக்கெல்லாம் அமைதிவழியில் எதையாவது புரியவைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
மகாத்மா காந்தியே வன்முறையை முற்றாக எதிர்க்கவில்லையே!பெண்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள,விரல் நகங்களையே ஆயுதங்களாக்கி வன்முறையில் ஈடுபடலாம் என்றுதானே சொல்கிறார்?

நமது நிலைமை இதைவிட மோசமானதில்லையா?

மேலும்,காந்தியின் காலம் என்றோ காலாவதியாகிவிட்டது.
காந்தி என்றபெயர்,அவருக்கே இல்லையென்றாகிவிட்டது.

ஆயுதப்போராட்டம் என்பதைவிட,
நினைத்துப்பார்க்கமுடியாத கொடுமைகளுக்கு வித்திட்ட சர்வாதிகாரிகளுள் ஒருவரான ´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.

ஸ்ரீலங்காவைத்தான் விட்டுத்தள்ளுவோம்... இந்தியத்திருநாட்டிலேயே ´மகாத்மாகாந்தி`என்பது மாயை என்றாகிவிட்டது.
திலீபனைச் சாகவிட்டோம்;
செந்தூரனைக் கண்டுகொள்ளவேயில்லை.
இன்னும் ஆண்டுக்கணக்காக அமைதிவழியில் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின்மீதே ஆயுதவன்முறைதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

அமைதிவழியில் போராடும் நமது மக்கள் செத்து விழுந்தால், எத்தனை பிணங்களையும் தின்னக் காத்திருக்கின்றன பேய்கள்.

வெள்ளையர்கள் காந்தியாரின் அமைதிவழிக்கு மதிப்புக் கொடுத்தார்கள்;
ஆனால் அந்த அமைதிவழியைத் தங்களுடனேயே எடுத்தும் சென்றுவிட்டார்கள்.

இதனாற்றான்,இலண்டன் மாநகரில் உண்ணாவிரதமிருந்த இளைஞன் பரமேஸ்வரனை அமெரிக்காவரை அழைத்துப்போய் பேச்சுவார்த்தை நடத்தி,அவனது உயிரைக் காப்பாற்ற அவர்களால் முடிந்தது.

இன்னும்,முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிக்கொண்டிருந்த அந்த வேளையில்,தமிழகமே திரண்டுநின்று,ஒரேகுரலில்
" ஏ! ஸ்ரீலங்காவே!போரை நிறுத்து!அப்பாவி மக்களின்மீது குண்டுகளைப் போடாதே!" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியது.

,அவர்களுக்கு அது துளியும் கேட்கவில்லை. டில்லிக்கும் கேட்கவில்லை.ஏன்?தமிழக ஆட்சியாளர்களுக்கே கேட்கவில்லை.
இன்னும்,எங்களைக் ´கோமாளிகள்`என்று கேலிசெய்தார்கள்.

ஆனால்,இது மட்டும் உடனடியாகவே அனைவரது காதுகளிலும் விழுந்து,அடுத்த கணமே நம்முடன் போர்ப்பிரகடனமும் செய்துவிட்டார்கள்.
 இப்போது,நான் தங்களிடம் கேட்கும் கேள்வி: இந்தக் கல்லில் நார் உரிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?

அதாவது,அமைதிவழிப் போராட்டம் இவர்கள் விடயத்தில் பலன்தருமா?

இவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது,´கசாப்புக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதுபோலில்லையா?

எனவே,காந்தியாரின் பெயரால் இயக்கம் கண்டிருக்கும் தாங்களாவது,எனது இந்த மனக்குமுறலைப் புரிந்துகொண்டு, நியாயம் வழங்குவீர்கள் எனும் எதிர்பார்ப்புடன் இம்மடலை நிறைவுசெய்கிறேன்.

வெல்க தமிழ்!!!