எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, April 29, 2010

கருணாநிதி கதைவசனத்தில் கோத்தபாயா

இந்தவகையில் கோத்தபாயா கொடுத்துவைத்தவர்தான். கருணாநிதி கதைவசனங்களைப் பேசிநடித்தே புகழ்பெற்ற எம்ஜிஆர், சிவாஜி போன்ற தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் வரிசையில், ஒரு சிங்களனாயிருந்தும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறதென்றால் அது சாதாரணமான விடயமல்ல!
மெரீனா கடற்கரையில் கருணாநிதி நடாத்திய ‘ ஒரு மணிநேர உண்ணாவிரதம்’ எனும் நாடகத்தில் கருணாநிதிதான் , நடிப்பு உட்பட கதைவசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் ;அதில் உபவேடங்களில் நடித்திருந்த மேனன் , நாராயணன் , பிரணாப் என்று அனைவருக்குமே அவரவர் மொழியில் எழுதியும் கொடுத்திருந்தார்.
ஆனால் இந்தப் பாழாய்ப்போன சிங்களம் கொஞ்சம் கஷ்டமாகிப்போய்விட்டது. அதனாற்றான், கோத்தபாயாவுக்கென்று எழுதியதைக் கொடுக்கமுடியாமலே போனது.
இதனால் கோத்தபாயாவுக்குக்கவலை ;
இவருக்கோ உற்றநண்பனைக்கவலைப்படுத்திவிட்டோமே என்று கவலை.

” கவலைப்படாதே (ராசபச்சே) சகோதரா! உனக்கென்றும் ஒருநேரம் வரும். அப்போது நீ மட்டும்தான் எனது வசனத்தைப்பேசுவாய்” என்று வரம் கொடுத்தார். அந்தநேரம் இப்போதுவந்திருக்கிறது.

இதில் நாடகம்,கதைவசனம் என்பதெல்லாம் கொஞ்சம் கற்பனைதான் ;
ஆனாலும் , அதில் உண்மை இல்லாமலும் இல்லை என்றவிடயம் கருணாநிதியை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

எடுத்த எடுப்பிலேயே, ‘ இந்தியாவைத்தந்திரமாக ஏமாற்றினோம் .... இந்தியாவின் போரைத்தான் நாம்நடத்தினோம்....என்றெல்லாம் இந்திய வல்லரசேகூனிக்குறுகி நாணும்வகையில் வாய்த்துடுக்காக வார்த்தைகளை அள்ளிவீசிய கோத்தபாயா, கருணாநிதியைத் தாம் ஏமாற்றியதைமட்டும் -

இவ்வளவு காலங்கடந்து, முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நினைவாஞ்சலிகள் நிகழவிருக்கும் இந்தநேரத்தில் ஏன்வெளியிடவேண்டும்?

இங்குதான் நாம் யோசிக்கவேண்டியிருக்கிறது.

கருணாநிதிக்கு இப்போதுள்ள அவசரதேவை: ‘தமிழினத்தின் ஒப்பற்ற ஒரேதலைவர்’ என்ற பெயரை மீட்டெடுப்பதே! அது தொலைந்து வெகுகாலமாகிவிட்டது என்பதையே நம்பமறுக்கிறது அவரது நப்பாசை!

அவனவன், ஒருவாழ்க்கை வாழ்வதற்கிடையிலேயே அல்லாடிப்போகிறான் ; போதும் போதும் என்றாகிவிடுகிறது. -

ஆனால், மனிதர் ஒரேநேரத்தில் மூன்றுவாழ்க்கையை வாழ்ந்தும், ஆசை அறுபடாநிலையில் தவிக்கிறார். ‘ மானாட மயிலாட... ‘ என்று அனைத்தையுமே ஆடவிட்டு இரசிக்கிறார்.

தனது கபடக் காய்நகர்த்தல்களின் வேடங்கலைந்து, தமிழர்கள் அனைவரும் தியாகி முத்துக்குமாரன் வழியில் ஒன்றுதிரண்டபோதே, கருணாநிதி ஒன்றைத் தெளிவாகப்புரிந்துகொண்டார்.

இனியும் தனது வாய்ஜாலங்கள் தமிழர்களிடம் எடுபடாதென்பதே அது.

எனவே, ‘ அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக்கொண்டிருந்த’ அப்பாவித்தமிழர்களை, அவர்களிடமே தாம் கொள்ளையடித்துச்சேர்த்துவைத்திருக்கும் பணத்தால் அடித்தும்,
பணத்துக்கு மசியாதவர்களை தனது கைத்தடிகளை அனுப்பிமிரட்டியும், உணர்வுள்ள தமிழ்த்தலைவர்களைச் சிறையிலடைத்தும், தமது அடுத்தகட்ட நடவடிக்கையை நகர்த்திப்பார்த்தார் ;

பணம்- பதவிகள்தான் மென்மேலும் சேர்கிறதேதவிர, பெயரை மீட்கமுடியாமலேயுள்ளது.

மனிதருக்கு இப்போது மரணபயம் இலேசாகப் பற்றிக்கொண்டதுபோலும்!
( இப்போதாவது வந்ததே! அந்தவகையில் இது தமிழனுக்கு விடிவுகாலம் என்பதன் அறிகுறி!)
எனவே, அந்தப்பெயரைமட்டும் மீட்டெடுத்துவிட்டால், நாலாவதுவாழ்க்கை வாழ்ந்தது போலிருக்குமே என்று நினைக்கிறார்....

‘கேட்காமலே இத்தனை வசைகளை இந்தியாவின்மீதே அள்ளிக்கொட்டிய நண்பன் , நாம் கேட்டு , இல்லையென்றா சொல்லப்போகிறான்?’ என்று கோத்தபாயாவையே அணுகியிருக்கிறார்.

அவர்தான் பிரித்தானியா, நோர்வே, அமெரிக்கா என்று எதையுமே விட்டுவைக்காமல், ‘வெள்ளைப்புலிகள்’ என்று வசைபாடிய வள்ளலாச்சே!

அவருக்குச் செக்கென்ன? சிவலிங்கமென்ன? எல்லாம் ஒன்றுதானே!

காலங்கடந்தும் மார்தட்டியிருக்கிறார் - நான்தான் செய்தேன் என்று!

கருணாநிதி விழித்துக்கொண்டுவிட்டார் என்பது சரி....

நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

இதுவே, ஒவ்வோரு தமிழனும் சகதமிழனிடமும் கேட்கும்
‘ மில்லியன் டாலர்’ கேள்வி!!!!

No comments:

Post a Comment