எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Thursday, April 7, 2011

யானை பார்த்ததுபோல் ‘ புலி ‘ யைப்பார்த்தவர்கள் - பாகம் 1


’ கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல ‘ மிகத்துல்லியமான பார்வையுடன் , திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழீழப்போராட்டமானது, -
‘ தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ‘ என்பதுபோல்,
கணனி கிடைத்தவன் எல்லாம் தலைவனாகி, -
எதிரிக்காக, ஒன்றிற்குமேற்பட்ட பாதைகளைத்திறந்து செங்கம்பளம்விரித்து நிற்கிறது.
தமிழீழத்துக்கான எமது போராட்டம்,
தற்காலிகமாக முடங்கியுள்ளதேதவிர,
’முடித்துவைக்கப்படவில்லை ‘ என்பதை,
மௌனிக்கிறோம் ‘
என, மிகத்தெளிவாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளபோதிலும்,
அதைக்கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல்,
‘ புலிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது ‘
என்று மனனம் செய்வதிலேயே இன்பம்காண்பவர்கள்தாம் இங்கு அதிகமாக உள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை காட்டிக்கொடுப்பு வேலைகளைமட்டுமே கனகச்சிதமாக்ச்செய்துகொண்டிருந்த பலர்,
‘ அண்ணை எப்ப சாவான் ; திண்ணை எப்ப காலியாகும் ‘ எனக்காத்திருந்ததுபோல -
இந்த இடைவெளியை நிரப்புவதில் போட்டிபோட்டுக்கொண்டு பொருளீட்டமுனைகின்றனர்.
ஆனாலும், இவர்கள் ,தமது துரோகமுகத்துக்கு , இனப்பற்று என அவர்களே சொல்லிக்கொள்ளும் ஒரு முகமூடியை அணிந்தபடியே புலம்பெயர்தேசத்துமக்களுள் வலம்வருகிறார்கள்.
அங்கு முள்வேலியிலுள் அல்லற்படும் மக்களுக்கு உதவிசெய்யப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டே பொருட்களாகவும் பணமாகவும் வசூலித்து தமது வாழ்வு வசதிகளைப்பெருக்கிக்கொள்கிறார்கள்.

உலகமே வியக்குமளவுக்கு இத்தனை அளப்பரிய தியாகங்களைச்செய்து, தமிழர்பிரச்சினைகளை உலகத்தின் கண்களுக்குத் தெரியவைத்த புலிகளைப்பற்றி இவர்களிடம்கேட்டால்,
“ இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை ; மக்களைப்பற்றித்தான் எமது கவலையெல்லாம்..... “
என்பதுபோன்ற தத்துவங்களை உதிர்த்துவிட்டு, -
புலம்பெயர்தமிழரைச்சுரண்டித் தமது வங்கிக்கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திடமே தட்டிப்பறித்து, தங்களுக்கு ஆதரவான சிங்களருக்கு வழங்கும் மகிந்தா கும்பலுக்கு , இவர்கள் எம்மாத்திரம்?
அப்படி இவர்கள் தட்டித்தவறி ஏதாவது, தமது உறவினர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் கொண்டுபோனாலும், அது முழுமையாக கொழும்பைத்தாண்டாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
செஞ்சிலுவைச்சங்கமானது, தான் கொண்டுபோன பொருட்களை, வினியோகம் செய்யும் இடத்தில்வைத்துத்தான் சிங்களக்காடையரிடம் பறிகொடுத்தது ; ஆனால், இவர்களோ தாமாகவே சிங்களரின் காலடியில்வைத்து, அதில் மிஞ்சும் ஓட்டை உடைசல்களைத்தான் அப்பால் கொண்டுபோகமுடியும். இதுதான் யதார்த்தம்.
யானை பார்த்த குருடர்கள் கதை நாமெல்லாம் சிறுவயதில் படித்ததுதான்.
ஒருவன் வாலைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு, யானை ‘ விளக்குமாறு ‘ போல் உள்ளது ‘ என்றானாம். மற்றவன், துதிக்கையைத்தடவிப் பார்த்துவிட்டு , உலக்கை போலுள்ளது என்றானாம். மற்றவர்கள் காலைத்தடவிப்பார்த்துவிட்டு ‘ தூண் ‘ என்றும், வயிற்றுப்பகுதியை ப்பார்த்துவிட்டு ‘ சுவர்’ என்றும் சொன்னார்களாம்.

இதைப்போலத்தான் இவர்களும்,----

மகிந்தாவின் பொய்ப்பிரச்சாரப்பீரங்கிகளை மட்டும் தடவிப்பார்த்துவிட்டு,
தம்மால் முடியாததை மகிந்தா செய்துமுடித்துவிட்டதாக, ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பவர்கள்.
இந்த ரகத்தைச்சேர்ந்த இவர்கள் எக்காலமும் இப்படியேதான் இருப்பார்கள். இவர்களெல்லாம் முற்றாகப் புறந்தள்ளப்படவேண்டியவர்களே!
எனினும் இந்தப் புலி எதிர்ப்பாளர்களில் இன்னோருவகையினரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது, தமக்கோ அன்றித் தமது உறவினருக்கோ போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காகப் புலியைக்குறைசொல்பவர்கள். இவர்களை ஓரளவு மன்னிக்கலாம் - இவர்களது அறியாமைக்காக....
ஈவிரக்கமேயில்லாமல் குழந்தைகளைக்கூட பொசுக்கித்தள்ளிய சிங்களக்காடையரைவிட்டு , மானங்காக்கவந்த மறவரைக் குற்றஞ்சொல்லும் இவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களே!
இந்த வகையினரை வழிக்குக்கொண்டுவருவது, தமிழுணர்வாளர்களின் சாதுரியமான அணுகுமுறையிற்றான் தங்கியுள்ளது.
மேற்சொன்ன இவ்விரண்டு பிரிவினரையும்விட, இன்னொருபிரிவினரும் உள்ளனர்.

இந்தப்பிரிவினர்பற்றி இரண்டாம்பாகத்திற்காண்போம்.

----------- சிவம் அமுதசிவம்


Wednesday, February 23, 2011

ஈழத்துத்தும்மல் - எச்சரிக்கை தமிழா! எச்சரிக்கை!

சினிமாவிலிருந்து ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கிறது அரசியலுக்கு- பஞ்ச் டயலாக் உடன்.

தமிழனுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் தன்மீது விழுந்த அடியாக நினைத்துப்போராடுவாராம் -

அண்மைக்காலம்வரை தமிழனுக்குத்தலைவலியாகவும், சினிமாவில் தளபதியாகவும் இருந்த நடிகர் விஜய்.

அவரது டயலாக் இன்படி இதுவரை தமிழன் அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறானே!

இவர் முதுகில் எத்தனை ’தமிழ்த்தழும்புகள்’ வைத்திருக்கிறார்?

ஈழத்தில் தமிழன் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டானே! அப்படிப்பார்த்தால், இவர் ஏழேழு தலைமுறைக்கும் உயிருடனேயே இருக்கக்கூடாதே!

இவ்வளவுக்குப்பிறகும், காங்கிரஸ் கட்சியிலேயே முக்கியபதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்தானே இவர்?

அதுவுமல்லாமல்,” ராகுலை ஏன் சந்தித்தீர்கள்?” என்ற நிருபர்களின் கேள்விக்கு, ராகுலின் கொள்கைகள் தனக்குப்பிடிக்கும் என்றும் , அதனாலேயே தாம் ராகுலைச்சந்தித்ததாகவும் ,திமிரோடு பதிலளித்தவர்தானே இந்த நடிகர் விஜய்?

ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டுவதையே தமது முக்கிய கொள்கையாகக்கொண்ட ராகுலைப்பிடிக்கும் என்றால் அதன் அர்த்தம்தான் என்ன?

தமிழனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டுவது எனும் கொள்கை இவருக்குப்பிடித்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும்?

இது வேறொன்றுமில்லை...

பெயரிடப்படாத விஜய் படத்துக்காக யாரோ எழுதிய வசனம். அந்த வசனத்தைப்பிரபலமாக்கி- பின்பு அதன்மூலம் படத்தைப்பிரபலமாக்கும் உத்தி இது.

ஈழத்தில் ஒருவன் தும்மினாலும்,அதைஈழத்துத்தும்மல் என்று பெயரிட்டு அதைப்பத்துமடங்கு பூதாகரமாக்கிப் பணம் பண்ணுவதைத்தவிர , உருப்படியாக என்னத்தைக் கிழித்துவிட்டார்கள் இவர்கள்?

கேவலம்,...அசின், அசித் திமிரையே அடக்கமுடியல - ஆ!...தவறு... விரும்பல.

குறைந்தபட்சமாக, திரையுலகிலிருந்து அவ்வப்போது நொதித்துச்சிதறும் நாற்றங்களை மறைக்கக்கூட முடியல.

தமிழைக் காப்பாத்தப்போறாராம் தமிழை.

முதல்ல, திரையுலக நாற்றத்திலிருந்து தமிழைக் காப்பாத்தட்டும்! தமிழ் தானாகவே வாழும்!

தமிழா! நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

மீண்டும் மீண்டும் சகதியிலேயே போய் விழுந்துகொண்டிருக்காமல் -

தற்காலிக சுகங்களையே பெரிதென மதிக்காமல் -

நீண்ட தொலைநோக்குப்பார்வையுடன் வாக்களித்து, எமது எதிர்காலச்சந்ததியாவது
சுதந்திரமாக வாழ வழிவகுப்போமாக!
-- சிவம் அமுதசிவம்

Friday, February 11, 2011

சுபவீ / மனநோய்

சுபவீ..... ஒரு மனநோய் வைத்தியநிபுணர்?
சுபவீ என்று அழைக்கப்படும் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கமடல்.
ஐயா! அண்மையில் மனநோய் என்பதற்கு நீங்கள் கொடுத்திருந்த வரைவிலக்கணம் மிகவும் அருமையாகவிருந்தது.
அதாவது, ‘மீனவர்கள் சிங்களரால் கொல்லப்படுவதற்கு, திராவிடமே காரணம் ‘ என்று யாராவது சொன்னால், அதுவே ஒருவகை மனநோய்க்கான அறிகுறி என்ற உங்கள் கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்றுதான்.( நோபல்?| கின்னஸ்?)
எனினும், பேராசிரியர் எனும் நிலையிலிருந்து நீங்கள் , மனநோய்வைத்திய நிபுணர் எனும் அவதாரம் எடுத்தது எப்போது? என்பதுதான் எமக்குப்புரியவில்லை.
நீங்களே உதிர்த்த தத்துவத்தின் அடிப்படையில் , உங்கள் முதுகையே ஒருமுறை திரும்பிப்பாருங்கள் ஐயா!
மனநோயாளி யார் என்பது தானாகவே புரியும்.
நினைவிருக்கிறதா சுபவீ அவர்களே?
பார்வதியம்மாள் திருப்பியனுப்பப்பட்ட விவகாரத்தில்,
தோழர் தியாகுவுக்கு நீங்கள் என்ன பதில் கொடுத்திருந்தீர்கள்?
இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்?
இது நீங்களே வெளியிட்ட தகவல்தான்.
இந்தப்பதில் சரியானதுதானா?
முதல்வர் என்றாலே, மக்களுக்காகத் தனது உடல், பொருள், ஆவி என்று அத்தனையையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் பொருள்.
அதிலும் உங்கள் முதல்வரோ அனைத்துக்கும் ஒருபடிமேலே உள்ளவர் _ (உங்கள் கருத்துப்படி).
அதாவது, தமிழ்மொழி இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், அஃது அவராற்றான். உலகத்தமிழினத்துக்கே
ஒப்பற்ற ஒரு தலைவர் அவர் _ (உங்கள் கருத்துப்படி)
பார்வதியம்மாள் உலகத்தமிழினத்தின் ஓரங்கமில்லையா?
ஒரு நோயாளியாக வாசல்வரை வந்த தமிழ்த்தாயை, வரவேற்க ஓடோடிச்செல்லவேண்டியவரல்லவா அவர்?
பார்வதியம்மாளோ, வயதான ஒரு நோயாளி ; உங்கள் முதல்வரும் அப்படியா?
நாலாவது வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கத்துடிக்கும் ஒரு இளைஞனல்லவா உங்கள் முத்தானமுதல்வர்?
தமிழுக்காகவே உயிரைத்தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவரெல்லாம்,நேரம் காலம் பார்க்கலாமா?
இதை அவரே மறந்தாலும் , அவருக்கு மந்தி(ரி) போலியங்கும் உங்களைப்போன்றவர்கள் நினைவூட்டவேண்டாமா?
அடுத்து, நீங்கள் அதில் குறிப்பிட்டிருப்பது : இலண்டனிலிருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதில் உதவி செய்யுமாறு கேட்டதற்கு, நீங்கள் ஏதோ ‘கிடுக்குப்பிடி‘ கேள்வி கேட்டு மடக்கிவிட்டதுபோன்ற எக்காளத்தொனியுடன் கூடியது.
அவர் கேட்டது ஒரேயொரு கேள்வி ; அதற்கு நீங்கள் கொடுத்ததோ மூன்று வெவ்வேறான பதில்கள் _ அதிலும் ஒருசில கேள்வி வடிவிலேயே.
அதில் முக்கியமானதொன்று : இப்போதுதான் கருணாநிதியையும் என்போன்றவர்களையும் உங்களுக்கு ஞாபகம்வந்ததா? என்பதுதான்.
இதில், அந்த ‘ என்போன்றவர்கள் ‘ என்ற சொற்றொடரின்மூலம் எதைக்கருதினீர்கள் வீரபாண்டியரே?
நிச்சயமாக, ‘ துரோகிகள் ‘ என்பதைத்தானே இதிற் சொல்லாமற் சொல்லியிருக்கிறீர்கள்?
சாதாரணர்களான எமக்கே புரிவது, பேராசிரியரான உங்களுக்குப் புரியாமற்போகுமா?
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
வீடு பற்றி எரிகிறது ; தீயை அணைக்க உதவிசெய் “ என்று கேட்டால், “ நீ நேற்றே சொல்லியிருந்தால் அணைத்திருப்பேன் ‘ இன்று நேரமில்லை “ என்பது போலல்லவா இருக்கிறது?
இதையெல்லாம் பார்த்தால், மனநோய் உள்ளவன் சொல்வது போல் தெரியவில்லையா உங்களுக்கு?
இனி, பிரபாகரனின் பெற்றோரை, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாதுஎன்று ஜெயலலிதா கடிதம் எழுதியதைக்கண்டிக்காதவர்கள்... என்று பழையபுராணம் பாடுகிறீர்களே!
அந்தநேரம் நீங்கள் எங்கு போயிருந்தீர்கள்?
புலிகளின் பணத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்பவர் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அளவுக்கு, தீவிர(?)_ புலி ஆதரவாளராக அறியப்பட்டவர்தானே நீங்கள்?
ஒருவார்த்தை கண்டித்துப்பேசியதுண்டா?
ஏன்? அதிகம் வேண்டாம் ; நீங்கள் இன்று தூக்கிப்பிடிக்கும் திமுக கூட எவ்விதமான எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே ‘ இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம் என்றிருக்கும் இந்தியாவில், அன்று தடாபோடா என்று என்னென்னமோ கொடுஞ்சட்டங்களெல்லாம் இருந்தது நீங்கள் அறியாததா?
நீங்கள்கூட அதில் நேரடியாகப்பாதிக்கப்பட்டவர்தானே?
இதில் யாரால் வாய்திறக்கமுடியும்?
‘ ஜெயலலிதா நெஞ்சில் குத்தினார் ;கருணாநிதி முதுகில்அல்லவா குத்திவிட்டார் ‘
இந்தப்பொன்மொழி ஞாபகத்தில் இருக்கிறதா? இதை உதிர்த்தவர் வேறு யாருமில்லை ;சாட்சாத் சு.ப.வீரபாண்டியன் என்கிற நீங்கள்தான் ஐயா! நினைவாற்றல் மிகுந்தவரல்லவா நீங்கள்? எனவே, புலம்பெயெர் தொலைக்காட்சியொன்றில், அன்று திருவாய் மலர்ந்தருளியதை நிச்சயமாக மறந்திருக்கமாட்டீர்கள்.
அவ்வப்போது மனதிற்தோன்றுவதையெல்லாம் பேசுகிறீர்கள்....
உங்களைத்தவிர மற்றவர்களெல்லாம் , நினைவாற்றலே அற்றவர்கள் என்று நீங்களே முடிவெடுத்துவிடுகிறீர்கள்............
இதுமட்டும் மனநோயாகத்தெரியவில்லையா உங்களுக்கு ?
இனி, விடயத்துக்கு வருவோம்.
அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காக, காற்று, மழை, வெயில் என்றெல்லாம்பாராது, கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை , ஏதோ தெருநாய்களைச்சுட்டுத்தள்ளுவதுபோல, சிங்களக்கடற்படை சுடுவதும், அதற்கு உங்கள் முதல்வர் அழகுதமிழ்தேடி, அவரது சொக்கத்தங்கம் சோனியாவுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதுவும்கூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லை.
உயிருக்காகப்போராடும் ஒருவனைக்காப்பாற்ற, அம்புலன்ஸ் எனப்படும் அவசரஉதவி வண்டிக்கு யாராவது கடிதம் எழுதி அனுப்பினால், அந்த நபரை என்னென்பது?
அதைத்தானே உங்கள் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்?
இந்த மனநோயைக் கண்டுகொள்ளாமல்விடுவதற்காக, அங்கிருந்து எவ்வளவு கிடைத்தது உங்களுக்கு?
யாரோ சென்னையில் ஒரு பதாதை வைத்துவிட்டார்கள் என்று , அதற்கு மனநோய்ப்பட்டம் சூட்டுகிறீர்கள்.
திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன
இந்தக்கூற்றில் என்ன தவறு உள்ளது என்று இப்படிப்புலம்புகிறீர்கள்?
ஒருவேளை இதையே,
திராவிடத்தின் பெயரால் சென்னையில் மழைபெய்யவில்லை
என்று பதாதை வைத்திருந்தால், நீங்கள் சொன்னதில் நியாயம் இருந்திருக்கும்.
ஆனால், திராவிடத்தின்பெயரால் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்பது தமிழகஅரசியலை அறிந்தஅனைவரும் அறிந்ததொன்றுதானே!
மாறிமாறி ஆட்சிக்குவரும் திராவிடக்கட்சிகள், தமிழர்நலன்களைப் புறக்கணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள, பூதக்கண்ணாடியாவேண்டும்?
மாறாக, மலேசியாவின் பினாங்குமாநில துணைமுதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி போன்ற, தமிழுணர்வாளர் ஒருவர் தமிழகத்தின் முதல்வரானால், காவிரிப்பிரச்சினை தொடங்கி , மீனவர் பிரச்சினைவரை எப்போதோ முடிவு கிடைத்திருக்கும்.
இப்போது சொல்லுங்கள் _ யார் மனநோயாளி?
தயவுசெய்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் _ ஒரு மனநோய்வைத்திய நிபுணராக.
இஃதே உங்களுக்கும் நல்லது ; தமிழினத்துக்கும் நல்லது.
இப்படிக்கு
சிவம் அமுதசிவம்

Sunday, December 26, 2010


பொள்ளாச்சி நசன் ஐயாவின் இடைவிடாத தமிழ்ப்பணி



அன்புடையீர் வணக்கம்

thamizham - கல்விக்கான நேரடிப் பகிர்வு

http://www.livestream.com/thamizham

மேற்காணும் இணைப்பின் வழியாக நேரடியாக தமிழ்க் கல்வி பற்றிய
செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு காரிக் கிழமையும் இந்தப் பகிர்வை நிகழ்த்த விரும்புகிறேன்.

தமிழ்க் கல்வி தொடர்பாக உங்களின் வினாக்கள்
உங்கள் தமிழ்ப் பள்ளிக்குத் தேவையான கருவிகள், பாடத்திட்டங்கள்
மாணவர்களுக்கான பிரச்சனைகள் அதைச் சரி செய்ய கருததுருக்கள்
மாணவர்கள் ஆற்றலோடு எழுவதற்கான படிநிலைகள்

இன்றைய பாடத்திட்டம் - அதன் குறைகள் எப்படி சரிசெய்து
நிறைவாக்கி எதிர்கால நாற்றுகளான மாணவர்களை எப்படி
வளர்த்தெடுப்பது என்பதற்கான வழி முறைகள்

இதுபோன்ற கல்வி தொடர்பான செய்திகளை வரிசைப் படுத்தி
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேரம் தமிழக நேரப்படி இரவு 7.30 முதல் 8.00 வரை
ஒவ்வொரு காரிக் கிழமைகளிலும் (சனிக்கிழமைகளிலும்)
நிகழ்த்த விரும்புகிறேன். முதல் பகிர்வினை
04- 01 - 2011 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் கற்பிக்கும் பள்ளிகள்
இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்

உங்களுக்கான பிரச்சனைகளை மின் அஞ்சல் வழி அனுப்பி
வைத்தால் அதற்கான தீர்வும், அணுகுமுறையும் இந்த நேரத்தில்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இந்த நிகழ்வு பற்றிய உங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும்
மின் அஞ்சல் செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன்
ம.நடேசன்,., க.மு., அறி.மு., கல்வி.மு., தொ.தூ,க.,
மின் அஞ்சல் - pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com

Sunday, July 4, 2010

குறைந்தபட்ச ஆறு வித்தியாசங்கள்


இரண்டு படங்களையும் நன்கு உற்றுப்பாருங்கள்.
தமிழனின் இரத்தங்குடித்த சாயல் தெரியவில்லை?
அரசியலும் சரி;
தனிப்பட்ட வாழ்விலும் சரி; இவர்களுக்கிடையில் குறைந்தபட்ச ஆறுவித்தியாசங்கள்கூட
காண்பது கஷ்டம்.
ஆனால், ஒற்றுமைகளோ.....
ஏராளம் ஏராளம்!
உளதோ இலதோ என்று கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கைத்துணைகள்.
ஆளுக்காள் இலக்கியநயத்தோடு பரிமாறிக்கொள்ளும் பட்டங்கள்!
அப்பப்பா! இவர்கள் இருவரதும் கூட்டுத்தயாரிப்பில் அவ்வப்போது வெளிவரும் நகைச்சுவைக்காட்சிகள் வெகு அபாரம்!
தமிழனிடமே கொள்ளையடித்துத் தமிழன் தலையிலேயே சம்பல் அரைக்கலாம் எனும் தொழிநுட்பத்தைக்கண்டுபிடித்தவர் தாமாக இருந்தாலும் , தமது அனுமதியின்றி அதே தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, தம்மைவிடவும் அதிகமாக ஜெயலலிதா சம்பாதித்துவிட்டாரே என்பதில் கருணாநிதிக்குப் பொறாமை. இதனால்,காந்தாரி- பூலான்தேவி இப்படியான பல பட்டங்களை அள்ளி வழங்கியிருந்தார். பதிலுக்கு அந்த அம்மாவும் தமது அறிவுக்கெட்டியவரை,
‘ மைனாரிட்டி அரசு’ அப்படி இப்படி என்று ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தது. ஆனாலும் அண்மைக்காலமாக இவர்களது சாக்கடை அரசியலுக்குத் தீனிபோடுவது என்னவோ ஈழத்தமிழர்களின் விலைமதிப்பற்ற உயிர்களே!
”நான் பதவியிலிருக்கும்போது, நீ ஆதரவுபோலக்க்காட்டிக்கொள்! ---
நீ இருக்கும்போது நான் காட்டிக்கொள்கிறேன்” என்பது இவ்விருவருக்குமிடையே எழுதப்படாத - பேசப்படாத
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இதிலும் தொட்டு / அதிலும் தொட்டு
இது தேவைப்படும்போது அதைத்தூற்றி _
அது தேவைப்படும்போது இதைத்தூற்றி
அடடா! என்ன ஒரு சாணக்கியமான நகர்வு!
அதற்காக, இவர்களொன்றும் பெரிய சாணக்கியர்கள் என்று அர்த்தம் இல்லை.
அவ்வளவுக்கு, தமிழன் இளிச்சவாயன் ஆக இருக்கிறான்.
இதில் நூறில் ஒருபங்கு கூட எங்கே அடுத்தமாநிலங்களில் அவியுமா?
தமிழீழமோ / தமிழகமோ _ தமிழனிடம் எல்லாம் அவிகிறது.
கருநாடகத்திலோ\ ஆந்திராவிலோ நின்று அவர்களது மொழியை இரண்டாந்தரமானமொழி என்று சொல்லிவிட்டு எவரும்
எல்லைதாண்டவே முடியாது.
ஆனால், தமிழகத்தில், தமிழனின் பணத்திலேயே மேடைபோட்டு, நாள்கணக்கில் நின்று சொல்லமுடிகிறதே! உலகிலேயே தமிழனைவிட இளிச்சவாயன் இல்லை என்பதற்கு இதைவிடவும் என்ன அத்தாட்சிவேண்டும்?
இப்போது புத்தம்புதியவெளியீடாக ஒரு நகைச்சுவைக்காட்சி வந்திருக்கிறது. ஏனெனில், தேர்தல் வருகிறது இல்லையா?
ஈழத்தமிழனுக்கு உருகுவதுபோல தலையங்கத்தை இட்டு, காங்கிரசுக்கு ஆதரவாக தாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதைக் காங்கிரசுக்குக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் இருவரும் ! இது காங்கிரசுக்கு மட்டுமே புரியும் என்பது இவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்.
இதில், தம்மைவைத்து இவர்கள் ‘ காமெடி’ பண்ணுகிறார்கள் என்றவிடயம் தமிழனுக்குப்புரியாது என்பதற்காகத்தான் , இந்தத்தலைப்பில் அது நடக்கிறது என்றவிடயம் காங்கிரசுக்கும் புரியும்.
இவர்களின் நகைச்சுவை விவாதங்களைத்தொகுத்து, புள்ளிகள் வழங்கி
யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ
அவருக்கே அடுத்த கூட்டணிக்கான அழைப்பு காங்கிரசிடமிருந்து கிடைக்கும்.
தமிழினத்துக்கே ஒரு இக்கட்டான நேரம் இது!
ராசபச்சேயைத்தூக்கிலிடுவதால் மட்டும் , தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா என்று உலகத்தமிழர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கும் நேரம் இது!
ஒரு ராசபச்சேயைத்தூக்கிலிட்டுவிட்டு , மற்றொரு ராசபச்சேயிடம் எம்மை
இந்த உலகம் ஒப்படைத்துவிடுமோ என்று தமிழன் எச்சரிக்கை அடையவேண்டிய நேரம் இது!
எமது இலக்கு ,தமிழீழம் என்பதிலிருந்து திசைமாறி - ராசபச்சேக்களைத் தூக்கிலிடுவதுடன் முடிந்துவிடுமோ என்று , தமிழுணர்வாளர்களெல்லாம் அச்சத்துடன் நோக்கும் நேரம் இது !
இத்தனை குழப்பங்களில் தவிக்கும் தமிழனையே பயன்படுத்தி, தனது அரசியல் எதிரியை அழித்தொழிக்க நினைக்கிறார் ஜெயலலிதா!
ராசபச்சேஉடன் சேர்த்து கருணாநிதியையும் தூக்கிலேற்றிவிட்டால்.....
பிறகென்ன? காலாகாலத்துக்கும் தாம்தானே தனிக்காட்டுராணி!
மனப்பால் குடிக்கிறார்.
போகிறபோக்கைப்பார்த்தால், நூறு தாண்டினாலும் இது போகாது போல இருக்கே! அச்சம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது அம்மாவுக்கு. எனவே -
கருணாநிதியையும் போர்க்குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளட்டாம் !
தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
ஏன் ? இத்தனைக்கும் காரணமான சோனியாவைச் சொல்லவேண்டியதுதானே!
ஆங்.... சொல்லமாட்டார். அது ஒருகாலத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு அது தேவை. முதலில் இதை முடிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார் முன்னாள் முதல்வர் அம்மா!
இந்த ஆறுவித்தியாசங்களை யான் ஆராயத்தொடங்கிய நேரத்துக்கு இப்போது அடுத்த காட்சியும் வெளியாகிவிட்டது.
‘ புலிகளைக்கொன்றது சரியானது என்றுதான் முன்னமே தாம் சொல்லியிருந்ததாக நினைவுபடுத்தி, சோனியாவிடம் தமக்கு முன்னுரிமை கேட்கிறார் ஜெயலலிதா!
விட்டால் இவர்கள் இருவருமே , தேர்தல் முடியும்வரை இப்படி ஏதாவது புஷ்வாணம் விட்டுக்கொண்டேயிருப்பார்கள்.
அதனால், எனது கட்டுரையை நான் இப்போதே வெளியிடுகிறேன்!
தமிழா! நீ முட்டாளல்ல எனும் முடிவை நீ எப்போது வெளியிடப்போகிறாய்?
நன்றாக உணர்ந்து கொள்!!
நீ தமிழன் ! நான் தமிழன்!! நாம் தமிழர்!!!

Wednesday, June 16, 2010

நீதியின்பால் இக்பால்




சபாஷ் இக்பால் ! சபாஷ் !
தமிழுக்குக் கைகொடுத்த தங்கள் செய்லுக்காக, தமிழுணர்வாளர்கள் தலைவணங்கிநிற்கிறோம்.
’நீதிக்குத்தலைவணங்கு’ என்ற, மக்கள்திலகத்தின் கூற்றுக்கிணங்க நீங்களும் ஈழவரலாற்றில் இடம்பெற்றேவிட்டீர்கள்!!

கடந்த 10.06.2010 அன்று, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் இல் நடைபெற்ற ‘ போருக்குப்பின்னான இலங்கையின் முரண்பாடுகள்(Srilanka in the Post – Conflict Situation) எனும் தலைப்புடன் நிகழ்ந்த, விசேட கலந்துரையாடலொன்றில், வழக்கமான
பொய் புளுகு மூட்டைகளுடன் , கேலியும் கிண்டலும் கலந்து அட்டகாசம் செய்துகொண்டிருந்த சிங்களக் கும்பலொன்றை, மண்கௌவச்செய்திருக்கிறார் இந்த M.C.M.இக்பால் எனும் மகத்தான மனிதர்.

தமிழர்கள் சார்பாக, BTF (British Tamil Forum) எனப்படும் ‘பிரித்தானிய தமிழர் பேரவைத்தலைவர் திரு, சுரேன் சுரேந்திரன் அழைக்கப்பட்டிருந்தும், என்ன காரணத்தினாலோ அவர் அங்கு சமுகமளித்திருக்கவில்லை.
இதனால்,கேட்பார்மேய்ப்பார் இல்லாமல்,சிங்களர் சார்பில் அழைக்கப்பட்டிருந்த, திரு.டலஸ் விக்கிரமரட்ன என்பவர் கதாநாயகவேடங்கட்டத்தொடங்கியிருக்கிறார் அங்கு.
போதாக்குறைக்கு, பெல்ஜியத்துக்கானதும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கானதுமான , இலங்கைத்தூதர் திரு.ரவிநாத் ஆரியசிங்கே என்பவரும் அவருடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு,தமிழர்கள்மீது சேற்றைவாரிஇறைத்திருக்கிறார்.
இவர்கள் இருவருமே வாயடைத்துநிற்கும்படியாக. தகுந்த ஆதாரங்களுடன் ,தமிழீழத்தின் உண்மைநிலையை அங்கு போட்டு உடைத்திருக்கிறார்
திரு M.C.M.இக்பால் அவர்கள்.
சிங்களரின் உளறல்களும், இக்பால் அவர்களின் பதிலும் :-
தமிழ், அரசகரும மொழியாகப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ; இதனால் அங்கு( ஸ்ரீலங்காவில்) மொழிப்பிரச்சினையே கிடையாது.
*மொழி உரிமை என்பது வெறும் காகிதத்திலேயே உள்ளது . இலங்கையில் உள்ள தமிழர் எவராவது ஒரு கடிதத்தை அரசாங்க திணைக்களத்திற்கு தமிழில் எழுதி அதற்கான பதிலைத் தமிழிலும் பெற முடியுமா?
இதை அரசபிரதிநிதியைப்பார்த்து ஒரு சவாலாகவே திரு.இக்பால் கேட்டிருந்தார்.அதற்குப்பதிலளித்த அரசபிரதிநிதி:
அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ; விரைவில் தமிழிலேயே பதிலைப் பெறக்கூடிய நிலை வரும்’ என்று பாதி பொய் | பாதி உண்மையாகப்பதிலளித்தார்.
அது என்ன? பாதி பொய் - பாதி உண்மை.....
‘அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்பது பொய்!
ஆனால், ’விரைவில் தமிழிலேயே பதிலைப்பெறக்கூடியநிலை வரும்’ என்பது உண்மைதானே! அதாவது. தமிழீழத்தில்!
(அந்தச் சிங்களனின் வாய்க்குள் சர்க்கரையல்ல... எதுபோட்டாலும் தகும்.)
மேலும் ,தொடர்ந்த அதிரடிப்பதில்கள் :
வடக்கு கிழக்கிற்கு வெளியே பெருமளவான தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். தலைநகர் கொழும்பில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையே அதிகம்.
*அவ்வாறானால் ஏன் கொழும்பிலுள்ள இரண்டு பிரதான உதவி அரச அதிபர் காரியாலயங்களுமே தமிழில் பணியாற்றுவதில்லை? தமிழ் பேசும் மக்கள் அங்கு தமது கருமங்களை ஆற்றுவதில் இடர்ப்படுகின்றனர். ஏனெனில் அந்த மக்களுக்குச் சிங்களம் தெரியாது. அதேவேளை அந்த உதவிஅரசஅதிபர்அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ் தெரியாது.
தமிழர்களுக்குஎதிராகநடந்தகலவரத்தைஆராயநியமிக்கப்பட்ட சன்சோனிக்கமிசன், நடைபெற்ற கலவரத்துக்கு அரசாங்கத்தையோசிங்களவர்களையோ குற்றம் சாட்டவில்லை.
* சன்சோனிக்கமிசனின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதை அன்றைய அரசாங்கம் விரும்பவில்லை என்பதால் சன்சோனிக்கமிசன் அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆக, நடைபெற்ற கலவரத்திலிருந்து சிங்களவர்களையோ, அரசாங்கத்தையோ சன்சோனிக்கமிசன் விடுவித்துவிட்டது என்று எப்படிக்கூறமுடியும்?
கதிர்காமர் போன்ற முக்கியபிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொன்றனரே!
* கதிர்காமர் கொலைவழக்கு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை. எனவே யார் கொன்றார்கள் எனத் தெரியவராத நிலையில் இவ்வாறு அறிக்கையிடுவது பொருத்தமற்றது. உதலகம ஆணைக்குழுவிற்கு முன்னால் இருந்த மிகமுக்கியமான மனிதஉரிமைமீறல் விசாரணைகளில் இதுவும்ஒன்று. ஆனால், கதிர்காமர்கொலை உட்பட பலமுக்கியமான விடயங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அவ்வாணைக்குழு, எந்த விடயம் தொடர்பாகவும் தனது விசாரணைகள் எவற்றையும் பூர்த்தியாக்க முன்னரேயே அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது
சிறிலங்காவினுடைய அரசர்களுடைய பண்புகள் உயர்ந்தது ; குறிப்பாக துட்டகைமுனு எனும் சிங்கள மன்னன் போரில் கொல்லப்பட்ட தனது எதிரியான எல்லாளனுக்கு நினைவுத் தூபி கட்டினான். சிங்கள மக்களது மற்றும் ஆட்சியாளர்களது பண்பும் அதனடியானது.
* பல தமிழ்மன்னர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஆண்டார்கள் .
இலங்கையை இறுதியாக ஆண்ட பல தமிழ்மன்னர்கள் கண்டியிலிருந்தே ஆட்சிபுரிந்தார்கள் . அவர்கள் புத்தருடைய புனித தந்தத்திற்குப்
பாதுகாவலர்களாக இருந்தார்கள்

இலங்கைக்கு என்றொரு வரலாற்று ரீதியான நீண்ட ஜனநாயகப்பாரம்பரியம் உண்டு.
* இலங்கை தனது சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில் பெரும் காலத்தை அவசரகாலச்சட்ட நிலைகளுக்குக் கீழேயே கழித்திருக்கிறது.அவசரகாலச்சட்டம் சாதாரண சட்டங்களை வலுவற்றதாக்கி விட்டது. இக்காலகட்டங்களில் மக்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுகிறது . நாட்டின் ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டை பரிபாலிப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தே பதவி ஏற்கிறார். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13 மற்றும் 17வது திருத்தங்களை அவர் மீறி விட்டுள்ளார். சாதாரணமாக இலங்கையில் ஜனநாயகம் என்பதே நடைமுறையில் இல்லை எனலாம் .

இடம் பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டனர். அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* இந்தத் தகவல் தவறானது. பெருமளவான இடம் பெயர்ந்த மக்கள் கடும் துன்பமுறுகின்றனர். அவர்களுடைய கிராமங்களில் அவர்களுக்கு வாழ்க்கை இல்லை என்றாகி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பணம் இன்னமும் வழங்கப்படவில்லை. பெருமளவான வீடுகளும் கட்டிடங்களும் சிதைவடைநது போய் இருக்கின்றன. கூடவே தெருக்களும் பாலங்களும் பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் நீர்விநியோகமும் சிதைவடைந்து போய்உள்ளன. ஆக, அவர்கள் ஒரு இக்கட்டான அவலத்துக்குரிய நிலைமைக்குள்ளேயே வாழ்கிறார்கள்.
அவ்வளவுமே ‘நச்’ என்ற பதில்களாக இல்லையா? ஆதாரங்களுடன் கொடுக்கக்கூடிய பதில்கள் அத்தனையையுமே, மிகத்தெளிவாகக் கொடுத்திருக்கிறார் திரு.இக்பால்.
திரு.சுரேன் சுரேந்திரன் போயிருந்தாலே, இவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்காது.வாதம் வேறுதிசையில் திரும்பினாலும் திரும்பியிருக்கும்.
இதனாற்றான், திரு சுரேன் சுரேந்திரன் தவிர்த்துக்கொண்டாரோ என்னமோ?

ஏற்கெனவே, அல்ஜசீராவுக்கு மகிந்தா வழங்கியசெவ்வியில் குறிப்பிட்டிருந்த_ ‘புலம்பெயர்தமிழர் நாடுதிரும்பமாட்டார்கள் ‘ என்று பாடிய பாட்டைத்தான் இங்கும் பாடியிருக்கிறார்கள் அந்தப்பராரிகள்.
ஆனால், திரு.இக்பாலைப்பொறுத்தவரை, இவர்கள் எதுவுமே வாய்திறக்கமுடியாது; ஏனெனில்,

இவர் இலங்கையின் சிவில் நிர்வாக அதிகாரியாக 40 வருடங்கள் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர். மேல்மாகாண சபையின் ஆளுநர் சர்வானந்தாவின் செயலாளராக_ முன்னாள் ஜனாதிபதி அமைத்த காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் செயலாளராக _ பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நியமித்த நிபுணத்துவ ஆணைக்குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். இப்போது எழுத்தாளராகவும், ஆய்வாளராகவும் இலங்கையின் உள்நாட்டுமுரண்பாடுகள் குறித்து எழுதியும் வருகிறார்.

இவ்வளவு அனுபவம் கொண்டவரிடம் எப்படி வாலாட்டமுடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ் இந்துக் கல்லூரியில் கற்று, பல்கலைக்கழகம் சென்றஒரு யாழ் முஸ்லீம் என தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவர் இந்த இக்பால்.

இலங்கையின் சார்பில் அழைக்கப்பட்ட ஏனையஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, நடராஜா குருபரன், ராதிகா தேவகுமார் ஆகியோரும் தமது கருத்துக்களைத்தெளிவாகவே வலியுறுத்தியிருந்தனர்.

ஆயினும், ஒரு முஸ்லிமாக இருந்தும் நீதியின்பால் நின்ற இக்பால் வாழ்க!!